மூலம்:
161 . ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
பரிமேழலகர் உரை:
ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு -
ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும்
குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க -
தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு -
அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை
பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக
என்பதாம்.].
மு.வ உரை:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத்
தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
G.U.Pope:
As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.
Explanation
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.
மூலம்:
162 . விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
பரிமேழலகர் உரை:
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாவர்
மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன்
பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை -
மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை
ஒப்பது இல்லை. (அழுக்காறு பகைவர் மாட்டும்
ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார்.
அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும்
அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன்
பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது
வேறொன்றும் இல்லை.
G.U.Pope:
If man can learn to envy none on earth,
'Tis richest gift, -beyond compare its worth.
Explanation
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.
மூலம்:
163 . அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
பரிமேழலகர் உரை:
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - மறுமைக்கும்
இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய
உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று
சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு
அறுப்பான் - பிறன் செல்வம் கண்டவழி அதற்கு
உதவாது அழுக்காற்றைச் செய்வான். ('அழுக்கறுத்தல்'
எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு
செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.).
மு.வ உரை:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று
கருதத்தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல்
பொறாமைப்படுவான்.
G.U.Pope:
Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not, feeling envious pain.
Explanation
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."
மூலம்:
164 . அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
பரிமேழலகர் உரை:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு
ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்;
இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து -
அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம்
வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன:
செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு
நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.).
மு.வ உரை:
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை
அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார்
அறிவடையோர்.
G.U.Pope:
The wise through envy break not virtue's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.
Explanation
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
மூலம்:
165 . அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.
பரிமேழலகர் உரை:
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு
பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்;
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு
உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு
அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை
ஏகாரம் விகாரத்தால் தொக்கது.).
மு.வ உரை:
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே
போதும், பகைவர் தீங்குசெய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத்
தருவது அது.
G.U.Pope:
Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate.
Explanation
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
மூலம்:
166 . கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
பரிமேழலகர் உரை:
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன்
பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச்
செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக்
கெடும் - உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக்
கெடும். (கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது,
கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை
செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு
சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை
தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும்
இழப்பிக்கும் என்பதாம்.).
மு.வ உரை:
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு
பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும்
இல்லாமல் கெடும்.
G.U.Pope:
Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or f eed them, surely die.
Explanation
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
மூலம்:
167 . அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பரிமேழலகர் உரை:
அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப்
பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத்
தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும்
பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை:
மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை
அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம்.
7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக்
கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று
உரைப்பாரும் உளர்.).
மு.வ உரை:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன்
தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
G.U.Pope:
From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey.
Explanation
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
மூலம்:
168 . அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
பரிமேழலகர் உரை:
அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று
சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி
உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண்
செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில்
செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும்,
தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை
பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார்,
கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின்.
இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது
குற்றம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய
செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்.
G.U.Pope:
Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.
Explanation
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
மூலம்:
169 . அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பரிமேழலகர் உரை:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - கோட்டத்தினைப்
பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும்,
செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - ஏனைச்
செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை
ஆராயப்படும். (கோட்டம்: ஈண்டு அழுக்காறு.
'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள்
கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல்
கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய
பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்'
'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான்
அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி
உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது"
(சிலப். 15: 91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.).
மு.வ உரை:
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை
இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
G.U.Pope:
To men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.
Explanation
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
மூலம்:
170 . அழுக்கற்று அகன்றாரும் இல்லை:அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பரிமேழலகர் உரை:
அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச்
செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார்
பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு
பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு
கூறப்பட்டது).
மு.வ உரை:
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை;
பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும்
இல்லை.
G.U.Pope:
No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.
Explanation
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.