திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       அறத்துப்பால்                       இல்லறவியல்

              அதிகாரம்: 17                   அழுக்காறாமை
161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

மு.வ உரை:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

162. விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

மு.வ உரை:
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

மு.வ உரை:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத்தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் பொறாமைப்படுவான்.

164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

மு.வ உரை:
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவடையோர்.

165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.

மு.வ உரை:
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்குசெய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத் தருவது அது.

166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

மு.வ உரை:
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

மு.வ உரை:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

மு.வ உரை:
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்.

169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

மு.வ உரை:
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.

170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை:அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

மு.வ உரை:
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

------


Back to Top