மூலம்:
141 . பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
பரிமேழலகர் உரை:
பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை -
பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக்
காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம்
பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண்
அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து
அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன்
உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர்.
செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு
நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப
நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று
கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்'
என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு
அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.).
மு.வ உரை:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும்
அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து
கண்டவரிடம் இல்லை.
G.U.Pope:
Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.
Explanation
The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.
மூலம்:
142 . அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
பரிமேழலகர் உரை:
'அறன்கடை' நின்றாருள் எல்லாம் - காமம்
காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்;
பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன்
இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று
நின்றார் போலப் பேதையார் இல்லை. (அறத்தின்
நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். அறன்கடை
நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின்
மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம்
நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே
அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய
இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்'
என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது
பெறப்பட்டது.).
மு.வ உரை:
அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன்
மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப்
போல் அறிவிலிகள் இல்லை.
G.U.Pope:
No fools, of all that stand from virtue's pale shut out,
Like those who longing lurk their neighbour's gate without.
Explanation
Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.
மூலம்:
143 . விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்.
பரிமேழலகர் உரை:
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை
ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை
விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர்
மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம்
பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர்
எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும்,
அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது
தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும்
கூறினார்.).
மு.வ உரை:
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே
விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட
வேறுபட்டவர் அல்லர்.
G.U.Pope:
They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.
Explanation
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.
மூலம்:
144 . எனைத்துணையர் ஆயினும் என்ஆம்? தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
பரிமேழலகர் உரை:
எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப்
பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய்
முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகழ்
- காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை
ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். (இந்திரன்
போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல்
நோக்கி, 'என்னாம்' என்றார். 'என் நீர் அறியாதீர்
போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்'
(கலித்.பாலை 6) உயர்த்தற்கண் பன்மை ஒருமை
மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை
ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.).
மு.வ உரை:
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம்
செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக
முடியும்?
G.U.Pope:
How great soe'er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour's wife.
Explanation
However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?
மூலம்:
145 . எளிதுஎன இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
பரிமேழலகர் உரை:
எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று
கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண்
இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி
எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும்
குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் -
இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.).
மு.வ உரை:
இச் செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம்
நெறிதவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும்
பழியை அடைவான்.
G.U.Pope:
'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.
Explanation
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.
மூலம்:
146 . பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்.
பரிமேழலகர் உரை:
இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து
செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என
நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும்,
குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும்
நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம்.
இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண்
குற்றம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன்
மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
G.U.Pope:
Who home ivades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four.
Explanation
Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.
மூலம்:
147 . அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்.
பரிமேழலகர் உரை:
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய
இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று
சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை
நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய
இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை
விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன்
நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான்
எனப்படுவான் அவனே என்பதாம்.).
மு.வ உரை:
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன்,
பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.
G.U.Pope:
Who sees the wife, another's own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtuously.
Explanation
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.
மூலம்:
148 . பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
பரிமேழலகர் உரை:
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன்
மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை,
சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு -
சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும்
ஆம். (புறப் பகைகளை அடக்கும்
ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம்
அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய
ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ'
என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும்
ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும்
என்பதாம்.).
மு.வ உரை:
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை,
சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
G.U.Pope:
Manly excellence, that looks not on another's wife,
Is not virtue merely, 'tis full 'propriety' of life.
Explanation
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.
மூலம்:
149 . நலக்குஉரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குஉரியாள் தோள்தோயா தார்.
பரிமேழலகர் உரை:
நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட
உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா
நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு
உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு
உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம்,
ஆழம், பொருளுடைமை முதலியவற்றான்
அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு'
என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல்
(நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை
எய்துவர் என்பதாம்.).
மு.வ உரை:
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால்
பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
G.U.Pope:
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?
The men who touch not her that is another's bride.
Explanation
Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.
மூலம்:
150 . அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
பரிமேழலகர் உரை:
அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன்
அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச்
செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை
நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண்
நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின்,
அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும்
என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல்
விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச்
செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல்
வாழ்தல் நல்லது.
G.U.Pope:
Though virtue's bounds he pass, and evil dee ds hath wrought;
At least, 'tis good if neighbour's wife he covet not.
Explanation
Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.