மூலம்:
131 . ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
பரிமேழலகர் உரை:
ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும்
சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும்
ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும்
பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப
விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு
வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந்
தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். 'உயிர்
எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம்
போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்'
என்றார்.).
மு.வ உரை:
ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால்,
அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
G.U.Pope:
'Decorum' gives especial excellence; with greater care
'Decorum' should men guard than life, which all men share.
Explanation
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.
மூலம்:
132 . பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை.
பரிமேழலகர் உரை:
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை
ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க,
தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள்
பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும்.
துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித்
தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே
ஆகலான். ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால்
தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது
சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்;
பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே
வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
G.U.Pope:
Searching, duly watching, learning, 'decorum' still we find;
Man's only aid; toiling, guard thou this with watchful mind.
Explanation
Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.
மூலம்:
133 . ஒழுக்கம் உடமை குடிமை: இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
பரிமேழலகர் உரை:
ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம்
வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை
குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய்
விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல்
அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த
வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம்
உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்'
என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும்
ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின்
இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள்
வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது
என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின்,
அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே
பயனாக ஓதப்பட்டன.).
மு.வ உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின்
தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின்
தன்மையாகிவிடும்.
G.U.Pope:
'Decorum's' true nobility on earth;
'Indecorum's' issue is ignoble birth.
Explanation
Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.
மூலம்:
134 . மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
பரிமேழலகர் உரை:
ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை
மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின்
பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு
ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த
வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி
இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும்
கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை
வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய
வருணங்கட்கும் கொள்ளப்படும்.).
மு.வ உரை:
கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக்
கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு,
ஒழுக்கம் குன்றினால் கெடும்.
G.U.Pope:
Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in 'decorum due,' birthright's gone for evermore.
Explanation
A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high bi rth will be destroyed.
மூலம்:
135 . அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
பரிமேழலகர் உரை:
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று -
அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல,
ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம்
இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை.
(உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும்
உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை?
கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும்
(குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர்
குலமாதல்.).
மு.வ உரை:
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல,
ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு
இல்லையாகும்.
G.U.Pope:
The envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains.
Explanation
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
மூலம்:
136 . ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
பரிமேழலகர் உரை:
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை
நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்;
இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து -
அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம்
உண்டாம் ஆற்றை அறிந்து. (ஒழுக்கத்தின் சுருக்கம்
அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட
விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.).
மு.வ உரை:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை
உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
G.U.Pope:
The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.
Explanation
Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.
மூலம்:
137 . ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை: இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
பரிமேழலகர் உரை:
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும்
ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின்
எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே
தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
(பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும்
இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று
கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார்.
இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும்
குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.).
மு.வ உரை:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து
தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
G.U.Pope:
'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.
Explanation
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.
மூலம்:
138 . நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்: தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
பரிமேழலகர் உரை:
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு
நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும்
இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை
தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய்
இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு
வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக்
காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல்
ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே
ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான்
பின்விளைவு கூறப்பட்டது.).
மு.வ உரை:
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக
இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
G.U.Pope:
'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally.
Explanation
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.
மூலம்:
139 . ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
பரிமேழலகர் உரை:
வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய
சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்;
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம்
உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத்
தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு
உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால்,
சொல்லுதல் தொழில் பலவாயின. சொல்
சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால்
என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது'
எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை
வடநூலார் 'தாற்பரியம்' என்ப.).
மு.வ உரை:
தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம்,
ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
G.U.Pope:
It cannot be that they who 'strict decorum's' law fulfil,
E'en in forgetful mood, should utter words of ill.
Explanation
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.
மூலம்:
140 . உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
பரிமேழலகர் உரை:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு
பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும்
அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும்
அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த
ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான்
ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு
ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன
கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு
ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும்,
அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின்,
அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும்
அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக்
கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு
பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும்
ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)
மு.வ உரை:
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக்
கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும்
அறிவில்லாதவரே ஆவர்.
G.U.Pope:
Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well.
Explanation
Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.