மூலம்:
1321 . இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
பரிமேழலகர் உரை:
தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட
தோழி, 'அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை?'
என்றாட்கு, அவள் சொல்லியது. அவர்க்குத் தவறு
இல்லையாயினும் - அவர் மாட்டுத்தவறில்லை
ஆயினும்; அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது -
நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு
ஊடுதலை விளைக்க வற்றாகின்றது.
('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம்.
''அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற் பாலதாய
இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக்கருதி, அது
பொறாமையான் ஊடல்நிகழா நின்றது'' என்பதாம்.) --
-
மு.வ உரை:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானாலும், அவரோடு ஊடுதல்,
அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்யவல்லது.,
G.U.Pope:
Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.
Explanation
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
மூலம்:
1322 . ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி
வாடினும் பாடு பெறும்.
பரிமேழலகர் உரை:
புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, 'அஃது
இழந்து புலவியான் வருந்துவது என்னை?' என்றாட்கு,
அவள் சொல்லியது. ஊடலின் தோன்றும் சிறுதுனி -
ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய
துனிதன்னால்; நல்லளிவாடினும் பாடு பெறும் - காதலர்
செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை
எய்தும்.
('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின்
அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும்
'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது'
என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம்
பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.)
---
மு.வ உரை:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல
அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
G.U.Pope:
My 'anger feigned' gives but a little pain;
And when affection droops, it makes it bloom again.
Explanation
His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
மூலம்:
1323 . புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீர்இயைந் தன்னார் அகத்து?
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. 'நிலத்தொடு நீர் இயைந்து அன்னார்
அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல
ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல;
புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு
புத்தேள் உலகம் உண்டோ? இல்லை.
(நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக்
காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான்,
அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள்,
'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர்
நமக்கும் அன்னராகலின், அப்புலவி பின்னே பேரின்பம்
பயவாநின்றது' என்பாள். 'புலத்தலின் புத்தேள் நாடு
உண்டோ?' என்றும் கூறினாள். உவமம் பயன்பற்றி
வந்தது.) ---
மு.வ உரை:
நிலத்தோடு நீர் பொருந்திக் கலந்தாற்போன்ற அன்புடைய
காதலரிடத்தில் ஊடுவதைவிட இன்பம் தருகின்ற தேவருலகம்
இருக்கின்றதோ?
G.U.Pope:
Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?
Explanation
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?
மூலம்:
1324 . புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.
பரிமேழலகர் உரை:
'அப்புலவி இனி யாதான் நீங்கும்?' என்றாட்குச்
சொல்லியது. புல்லி விடாப் புலவியுள் தோன்றும் -
காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு
ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம்
உடைக்கும் படை. - அதன் மேற்சென்ற
என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம்.
('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண்
வந்தது. என்னுள்ளம் உடைக்கும் 'படைக்கலம்'
என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும்.
'படைக்கலம்' என்றாள். அவற்றான் அப் புலவிஉள்ளம்
அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.) ---
மு.வ உரை:
காதலரைத் தழுவிக் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான
ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை
தோன்றுகிறது.
G.U.Pope:
'Within the anger feigned' that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.
Explanation
In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.
மூலம்:
1325 . தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்குஒன்று உடைத்து.
பரிமேழலகர் உரை:
தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன்
கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது. தவறு
இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் -
ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல
ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய
தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு
ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம்
பயத்தல் உடைத்து.
('உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும்
இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை
இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை'
என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று
உடைத்து' என்றான். 'ஊடலினாய இன்பம்
அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான்,
'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி
ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.) ---
மு.வ உரை:
தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும்
மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர்
இன்பம் உள்ளது,
G.U.Pope:
Though free from fault, from loved one's tender arms
To be estranged a while hath its own special charms.
Explanation
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
மூலம்:
1326 . உணலினும் உண்டது அறல்இனிது: காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. உணலினும் உண்டது அறல் இனிது -
உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல்
இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது -
அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத்
தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.
('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும்
விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக
உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,
அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம்
எனத் தன் அனுபவம்பற்றிக் கூறியவாறு.) ---
மு.வ உரை:
உண்பதைவிட முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது;
அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
G.U.Pope:
'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet.
Explanation
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
மூலம்:
1327 . ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம்
நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர்
வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது
அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப்
புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும்.
(தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர்
புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார்.
மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது
சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்'
என்பதாம்.) ---
மு.வ உரை:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர்; அந்த உண்மை,
ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
G.U.Pope:
In lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is s een to win the day.
Explanation
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
மூலம்:
1328 . ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய
உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை
கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப்
பெறுகுவம் சொல்லோ - இன்னும் ஒருகால் இவள் ஊடி
யாம் பெறவல்லேமோ?
(கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றாள்.
இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து
உற்றறிதலானாய இன்பம், 'இனி அப்பேறு கூடாது'
எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.) ---
மு.வ உரை:
நெற்றி வியர்க்கும்படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை,
ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?
G.U.Pope:
And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.
Explanation
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
மூலம்:
1329 . ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. ஔ¢ இழை ஊடுக மன் - ஔ
¢யிழையினை உடையாள் இன்னும் எம்மோடு
ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம்
அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு
யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை,
இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.
('ஊடுக, நீடுக' என்பன வேண்டிக் கோடற்பொருளன.
'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன.) ---
மு.வ உரை:
காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும்
பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும்
நீட்டிப்பதாக.
G.U.Pope:
Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!
Explanation
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!
மூலம்:
1330 . ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. காமத்திற்கு இன்பம் ஊடுதல் -
காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை
நுகர்தற்குரியராவார் ஆராமை பற்றித் தம்முள் ஊடுதல்;
அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் - அவ்வூடுதற்கு
இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி
முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம்.
(கூடுதல் - ஒத்த அளவினராதல், முதிர்ந்த துனியாய
வழித்துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக்
கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும்
இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி,
'கூடிமுயங்கப் பெறின்' என்றான். 'அவ்விரண்டு
இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.)
மு.வ உரை:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின்
கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
G.U.Pope:
A 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast.
Explanation
Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.