திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 131                   புலவி
1301. புல்லாது இராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

மு.வ உரை:
(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்பநோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

1302. உப்புஅமைந் தற்றால் புலவி: அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

மு.வ உரை:
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவுகடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

மு.வ உரை:
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பநோய் செய்து வருத்தினாற் போன்றது.

1304. ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதல்அரிந் தற்று.

மு.வ உரை:
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலே அறுத்தல் போன்றது.

1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

மு.வ உரை:
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

1306. துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

மு.வ உரை:
பெரும்பிணக்கும் சிறுபிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

1307. ஊடலின் உண்டுஆங்கோர் துன்பம் புணர்வது
நீடுவது அன்றுகொல் என்று.

மு.வ உரை:
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

1308. நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதுஅறியும்
காதலர் இல்லா வழி?

மு.வ உரை:
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?

1309. நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

மு.வ உரை:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

1310. ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

மு.வ உரை:
ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

------


Back to Top