மூலம்:
1291 . அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது?
பரிமேழலகர் உரை:
தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத
நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. நெஞ்சு -
நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் -
அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய்
நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் -
நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம்
யாது?
(அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல்.
'எமக்காகாதது' என்றது, புலவிக்கு உடம்பாடாமையை.
'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார்
செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும்
செய்கின்றிலை,' என்பதாம்.) ---
மு.வ உரை:
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம்
வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத்
துணையாகாதது ஏன்?
G.U.Pope:
You see his heart is his alone
O heart, why not be all my own?
Explanation
O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
மூலம்:
1292 . உறாஅ தவர்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு !
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. என் நெஞ்சு - என் நெஞ்சே;
உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு
அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்;
செறார் என அவரைச்சேறி - நாம் சென்றால் வெகுளார்
என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய்,
இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?
('அவரை' என்பது வேற்றுமை மயக்கம்.
'பழங்கண்ணோட்டம் பற்றி வெகுளார் என்பது கந்தாகச்
சென்றாய், நீ கருதியது முடியுமோ?' என்பதாம்.) ---
மு.வ உரை:
என் நெஞ்சே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும்,
அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
G.U.Pope:
'Tis plain, my heart, that he 's estranged from thee;
Why go to him as though he were not enemy?
Explanation
O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."
மூலம்:
1293 . கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல் ?
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. நெஞ்சே; நெஞ்சே, நீ பெட்டாங்கு
அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ
விரும்பியவாறே அவர் மாட்டுச் செல்லுதற்குக்
காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? -
கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும்
நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக.
('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே
பயின்றது,' என்பாள்; 'பெட்டாங்கு' என்றும், தான்
இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும்
கூறினாள். 'பின்' என்பது. ஈண்டு இடப் பொருட்டு.
'செலல்' என்பது ஆகுபெயர். ''ஒல்கிடத்து உலப்பிலா
உணர்விலார் தொடர்பு''
(கலித். பாலை 25) ஆயிற்று, நின் தொடர்பு
என்பதாம்.) ---
மு.வ உரை:
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின் படியே அவர் பின் செல்வதற்குக்
காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும்
எண்ணமோ?
G.U.Pope:
'The ruined have no friends, 'they say; and so, my heart,
To follow him, at thy desire, from me thou dost depart.
Explanation
O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
மூலம்:
1294 . இனிஅன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று?
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. நெஞ்சே - நெஞ்சே! துனி செய்து மற்றுத்
துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக்
கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை
உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்;
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான்,
இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார்
யார்? யான் அதுசெய்யேன்.
(அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள், 'காண்'
என்பது உரையசை. 'மற்று' வினையாற்றின் கண்
வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து,
பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.) ---
மு.வ உரை:
நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்;
இனிமேல் அத்தகையவற்றைப்பற்றி உன்னோடு கலந்து எண்ணப்
போகின்றவர் யார்?
G.U.Pope:
'See, thou first show offended pride, and then submit,' I bade;
Henceforth such council who will share with thee my heart?
Explanation
O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?
மூலம்:
1295 . பெறாஅமை அஞ்சும்: பெறின்பிரிவு அஞ்சும்:
அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு.
பரிமேழலகர் உரை:
வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள்
சொல்லியது. பெறாமை அஞ்சும் - காதலரைப் பெறாத
ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு
அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை
உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு
அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம்
எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று.
(காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல்
உறுதியன்று என்னும் கருத்தான் வாயில்
நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும்,
'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின்
யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு
அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது
இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து'
என்றும் கூறினாள்.) ---
மு.வ உரை:
(காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால்
பிரிவை நினைந்து அஞ்சும்; (இவ்வாறாக) என்நெஞ்சம் தீராத
துன்பம் உடையதாகின்றது.
G.U.Pope:
I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.
Explanation
My soul fears when it is without him; it also fears when it is with him; it is sub ject to incessant sorrow.
மூலம்:
1296 . தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு
ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் -
காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான்
தன்னோடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ்
அளவறிந்து என்னைத் தின்பது போன்று துன்பம்
செய்தற்கே.
('என் மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை
உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே; இன்று
அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று,' என்பதாம்.)
---
மு.வ உரை:
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை
நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பதுபோல் துன்பம்
செய்வதாக இருந்தது.
G.U.Pope:
My heart consumes me when I ponder lone,
And all my lover's cruelty bemoan.
Explanation
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
மூலம்:
1297 . நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சில் பட்டு.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. அவர் மறக்கல்லா என் மாணா
மடநெஞ்சிற் பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான்
மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத
மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என்
உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன்.
(மாணாமை - ஒருநிலையில் நில்லாமை. மடமை -
கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந்தவற்றைக்
காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் -
எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார்
போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி
விதும்பலின், அதனையும மறந்தேன்,' என்றாள்.) ---
மு.வ உரை:
காதலரை மறக்கமுடியாத என்னுடைய சிறப்பில்லாத
மடநெஞ்சினோடு சேர்ந்து.,மறக்கத் தகாததாகிய நாணத்தையும்
மறந்துவிட்டேன்.
G.U.Pope:
Fall'n 'neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame.
Explanation
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
மூலம்:
1298 . எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. உயிர்க்காதல் நெஞ்சு - உயிர்மேல்
காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம்
என்று எண்ணி - நம்மை எள்ளிச் சென்றார் என்று
நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று
கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே
நினையாநின்றது.
(எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு -
வழிபடாடையானும், பிரிவாற்றாமையானும், நாணும்
நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் -
வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின.
'இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட
மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது' என்பதாம்.) -
--
மு.வ உரை:
உயிரின்மேல் காதல்கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை
இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த
பண்புகளையே நினைக்கின்றது,
G.U.Pope:
If I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o'er.
Explanation
My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
மூலம்:
1299 . துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி?
பரிமேழலகர் உரை:
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன்
சொல்லியது. துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம்
வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் பணை
அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய
நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே -
வேறு துணையாவார் ஒருவரும் இல்லை
(ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின்
வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது,
அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே
விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று
விடுதலே உள்ளது,' என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள
நெஞ்சமே துணையாகாவிட்டால், வேறு யார் துணையாவார்?
G.U.Pope:
And who will aid me in my hour of grief,
If my own heart comes not to my relief?
Explanation
Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?
மூலம்:
1300 . தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய
நெஞ்சம் தமர்அல் வழி.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி -
தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர்
அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார்
தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ?
('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என்
நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள்
புலக்கின்றது எளிது,' என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒருவர்க்குத் தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது
அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
G.U.Pope:
A trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own!
Explanation
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.