திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       அறத்துப்பால்                       இல்லறவியல்

              அதிகாரம்: 13                   அடக்கமுடைமை
121. அடக்கம் அமரருள் உய்க்கும்: அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

மு.வ உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்திவிடும்.

122. காக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்
அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு.

மு.வ உரை:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

123. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

மு.வ உரை:
அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

124. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

மு.வ உரை:
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வைவிட மிகவும் பெரிதாகும்.

125. எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்: அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.

மு.வ உரை:
பணிவுடையராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

மு.வ உரை:
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

127. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

மு.வ உரை:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

128. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகா தாகி விடும்.

மு.வ உரை:
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

129. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

மு.வ உரை:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும் . ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

130. கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

மு.வ உரை:
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

------


Back to Top