மூலம்:
121 . அடக்கம் அமரருள் உய்க்கும்: அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
பரிமேழலகர் உரை:
அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம்
ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ;
அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் -
அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய
இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக
விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்"
(நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது
ஒரு சொல்லாய் நின்றது.).
மு.வ உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம்
இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில்
செலுத்திவிடும்.
G.U.Pope:
Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.
Explanation
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).
மூலம்:
122 . காக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்
அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு.
பரிமேழலகர் உரை:
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை -
உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை;
அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான்
அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு
அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை.
அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து
அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.).
மு.வ உரை:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக்
காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு
இல்லை.
G.U.Pope:
Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul!
Explanation
Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.
மூலம்:
123 . செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
பரிமேழலகர் உரை:
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் -
அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து
நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து
சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான்
அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்.
(இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது,
மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.).
மு.வ உரை:
அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்
பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை
பயக்கும்.
G.U.Pope:
If versed in wisdom's lore by virtue's law you self restrain.
Your self-repression known will yield you glory's gain.
Explanation
Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.
மூலம்:
124 . நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
பரிமேழலகர் உரை:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் -
இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று
அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது -
மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது
அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே
அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.).
மு.வ உரை:
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய
உயர்வு, மலையின் உயர்வைவிட மிகவும் பெரிதாகும்.
G.U.Pope:
In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.
Explanation
More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.
மூலம்:
125 . எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்: அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
பரிமேழலகர் உரை:
பணிதல் எல்லோர்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி
அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்;
அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து -
அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே
வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து.
(பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும்
உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி
அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே
செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து'
என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும்
உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து
பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
பணிவுடையராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்;
அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம்
போன்றதாகும்.
G.U.Pope:
To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem.
Explanation
Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.
மூலம்:
126 . ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
பரிமேழலகர் உரை:
ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் -
ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண்
ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்;
எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை
அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை
உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர்
புகுதாமல் அடக்குமாறு போல இவனும்
ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும்
என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த
வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது
இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள
வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும்
சிறப்பு உடையது.
G.U.Pope:
Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains.
Explanation
Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.
மூலம்:
127 . யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
பரிமேழலகர் உரை:
யாகாவாராயினும் நாகாக்க - தம்மால் காக்கப்படுவன
எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும்
நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல்
இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின்
சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக்
காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே
துன்புறுவர். ('யா' என்பது அஃறிணைப் பன்மை
வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது.
முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் -
சொல்லின்கண் தோன்றும் குற்றம்.
'அல்லாப்பர்செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்'
என்பது ஒரு சொல்.).
மு.வ உரை:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும்
நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற்
குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
G.U.Pope:
Whate'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep.
Explanation
Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.
மூலம்:
128 . ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகா தாகி விடும்.
பரிமேழலகர் உரை:
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்-
தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும்
துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல்
உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் -
அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை
தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும்
பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன்
நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே
ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன்
பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும்
உளர்.).
மு.வ உரை:
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும்
ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை
விளையாமல் போகும்.
G.U.Pope:
Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.
Explanation
If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.
மூலம்:
129 . தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
பரிமேழலகர் உரை:
தீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன்
தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும்,
மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட
வடு ஆறாது - அவ்வாறன்றி வெவ்வுரை உடைய
நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும்
ஆறாது. (ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப்
'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால்
சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும்
வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும்,
ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது
போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை
அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி
அடக்கம் கூறப்பட்டது.
மு.வ உரை:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்
. ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
G.U.Pope:
In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more.
Explanation
The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.
மூலம்:
130 . கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
பரிமேழலகர் உரை:
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி -
மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக்
கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது
செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து -
அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும்
நெற்றியின்கண் சென்று. (அடங்குதல் - மனம் புறத்துப்
பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன்
குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள்
இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம்
தானே சென்று அடையும் என்பதாம். இதனான்
மனவடக்கம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக
இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில்
சென்று அறம் பார்த்திருக்கும்.
G.U.Pope:
Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path.
Explanation
Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.