மூலம்:
1281 . உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.
பரிமேழலகர் உரை:
(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக்
காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத்
தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் -
நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண
மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்;
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு
இல்லை, காமம் உடையார்க்கு உண்டு. (களித்தல் -
உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது,
இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின்
'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி
விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல்
யாண்டையது' என்பதாம்.)
மு.வ உரை:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி
அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு
இல்லை; காமத்திற்கு உண்டு.
G.U.Pope:
Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight.
Explanation
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
மூலம்:
1282 . தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. காமம் பனைத்துணையும் நிறைய வரின்.
மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக
உண்டாமையின்; தினைத்துணையும் ஊடாமை
வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும்
ஊடுதல் செய்யாமை வேண்டப்படும்.
('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு
விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப்
பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக்
கூறியவாறு.) ---
மு.வ உரை:
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு
தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க
வேண்டும்.
G.U.Pope:
When as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain.
Explanation
If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
மூலம்:
1283 . பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. பேணாது பெட்பவே செய்யினும் -
நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே
செய்யுமாயினும்; கொண்கனைக் கண் காணாது
அமையல - கொண்கனை என் கண்கள் காணாது
அமைகின்றன இல்லை.
(தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்பட்டது.
'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை?'
என்பதாம்.) ---
மு.வ உரை:
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு
விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள்
காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
G.U.Pope:
Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.
Explanation
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
மூலம்:
1284 . ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. தோழி - தோழீ! ஊடற்கண் சென்றேன் -
காதலரைக் காணாமுன் அவர்செய்த தவற்றைத்
தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே
சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண்
சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து
கூடுதற்கண்ணே சென்றது.
(சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின்,
'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன் என்
என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண்
வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான்,
அது முடிந்ததில்லை' என்பதாம்.) ---
மு.வ உரை:
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்: ஆனால்
என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு
கூடுவதற்காகச் சென்றது.
G.U.Pope:
My friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain.
Explanation
O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
மூலம்:
1285 . எழுதும்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. எழுதுங்கால் கோல் காணாக்
கண்ணேபோல் முன்னெல்லாங் கண்டிருந்தும்
எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு
காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி
கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு
காணாதவிடத்தெல்லாம் கண்டிருந்து, அவனைக் கண்ட
விடத்துக் காணமாட்டேன்.
(கோல்; ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு
இதுவாகலின், மேலும் அது தப்ப முடியாது'
என்பதாம்.) ---
மு.வ உரை:
மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காணாத கண்களைப்போல்,
காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை
நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.
G.U.Pope:
The eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh.
Explanation
Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.
மூலம்:
1286 . காணும்கால் காணேன் தவறாய: காணாக்கால்
காணேன் தவறல் லவை.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. காணுங்கால் தவறாய காணேன் -
கொண்கனை யான் காணும் பொழுது அவன்
தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால்
தவறல்லவை காணேன்-காணாத பொழுது
அவையேயல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன்.
(செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு
நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது
காணாமையின் புலந்திலேன்,' என்பதாம்.) ---
மு.வ உரை:
காதலரை யான் காணும்போது (அவருடைய செயல்களில்)
தவறானவற்றைக் காண்பதில்லை.அவரைக் காணாத போது தவறு
அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
G.U.Pope:
When him I see, to all his faults I 'm blind;
But when I see him not, nothing but faults I find.
Explanation
When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
மூலம்:
1287 . உய்த்தல் அறிந்து புலன்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்துஎன் புலந்து.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது.- உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே
போல் - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல்
அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல்
போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? . புலவி
முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு
புலந்து பெறுவது என்?
('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் .
புரைபடுதல். 'புலந்தாலும் பயனில்லை' என்பதாம்.
'பொய்த்தல் அறிந்தென்' என்பது படாமையின்,
'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் போல முடிவறியப்
பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன்; இனி
அது செயற்பாற்றன்று என' உரைக்க.) ---
மு.வ உரை:
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓடும் நீரில்
பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்தும் ஊடல்
கொள்வதால் பயன் என்ன?
G.U.Pope:
As those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem?
Explanation
Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
மூலம்:
1288 . இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
பரிமேழலகர் உரை:
தலைமகள் புணர்ச்சி? விதுப்பு அறிந்த தோழி,
தலைமகற்குச் சொல்லியது. கள்வ - வஞ்சக;
களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே
- தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க
இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல்
விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு -
எங்கட்கு நின் மார்பு.
(அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை.
ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை
முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச்
செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா
நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.)
---
மு.வ உரை:
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு
களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது
உன் மார்பு.
G.U.Pope:
Though shameful ill it works, dear is the palm-tree wine
To drunkards; traitor, so to me that breast of thine!
Explanation
O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.
மூலம்:
1289 . மலரினும் மெல்லிது காமம்: சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
பரிமேழலகர் உரை:
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன்
சொல்லியது. காமம் மலரினும் மெல்லியது - காம
இன்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும்; அதன்
செவ்வி தலைப்படுவார் சிலர் - அங்ஙனம்
மெல்லியதாதலை யறிந்து அதன் செவ்வியைப்
பெறுவார் உலகத்துச் சிலர்.
(தொட்ட துணையானே மனச் செவ்வி அழிவதாய
மலர் எல்லாவற்றினும் மெல்லியது என்பது
விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும்,
வேட்கையும், நுகர்சியும், இன்பமும் ஒரு
காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர்,
அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும்
பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின், 'அதன் செவ்வி
தலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள் யாதானும்
ஒன்றனாற் சிறிது வேறுபடினும் வாடுதலின்,
'மலரினும் மெல்லியது' என்றும் கூறினான். 'குறிப்பு
ஒவ்வாமையின் யான் அது பெறுகின்றிலேன்'
என்பதாம். தலைமகள் ஊடல் தீர்வது பயன்.) ---
மு.வ உரை:
காமம் மலரைவிட மென்மை உடையதாகும்; அந்த உண்மை
அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.
G.U.Pope:
Love is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few.
Explanation
Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
மூலம்:
1290 . கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. கண்ணின் துனித்தே-காதலி முன்னொரு
ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன்
கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான்
விதுப்பு உற்றுக் கலங்கினாள்- புல்லுதலை என்னினும்
தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே
மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான்
இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற
இவள் அவளல்லள்.
(கண் மாத்திரத்தான் ஊடல்-சொல் நிகழ்ச்சியின்றி அது
சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம்
ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.) ---
மு.வ உரை:
கண்பார்வையின் அளவில் பிணங்கி, என்னைவிடத் தான் விரைந்து
தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து)
கலங்கிவிட்டாள்.
G.U.Pope:
Her eye, as I drew nigh one day, with anger shone:
By love o'erpowered, her tenderness surpassed my own.
Explanation
She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.