திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 129                   புணர்ச்சிவிதும்பல்
1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.

மு.வ உரை:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.

1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

மு.வ உரை:
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

1283. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்.

மு.வ உரை:
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு.

மு.வ உரை:
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்: ஆனால் என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

1285. எழுதும்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

மு.வ உரை:
மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காணாத கண்களைப்போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

1286. காணும்கால் காணேன் தவறாய: காணாக்கால்
காணேன் தவறல் லவை.

மு.வ உரை:
காதலரை யான் காணும்போது (அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை.அவரைக் காணாத போது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

1287. உய்த்தல் அறிந்து புலன்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்துஎன் புலந்து.

மு.வ உரை:
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓடும் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?

1288. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

மு.வ உரை:
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

1289. மலரினும் மெல்லிது காமம்: சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

மு.வ உரை:
காமம் மலரைவிட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

1290. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

மு.வ உரை:
கண்பார்வையின் அளவில் பிணங்கி, என்னைவிடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து) கலங்கிவிட்டாள்.

------


Back to Top