திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 128                   குறிப்பறிவுறுத்தல்
1271. கரப்பினுங் கையிகந்து ஒல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதுஒன்று உண்டு.

மு.வ உரை:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்று இருக்கின்றது.

1272. கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

மு.வ உரை:
கண்நிறைந்த அழகும் மூங்கில்போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

1273. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்நை
அணியில் திகழ்வதுஒன்று உண்டு.

மு.வ உரை:
(கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப்போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு.

மு.வ உரை:
அரும்பு தோன்றும்போதும் அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

1275. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்துஒன்று உடைத்து.

மு.வ உரை:
காதலி என்னை நோக்கிச் செய்துவிட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு. என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

1276. பெரிதுஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிதுஆற்றி
அன்புஇன்மை சூழ்வது உடைத்து.

மு.வ உரை:
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல் கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

1277. தண்அம் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

மு.வ உரை:
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மைவிட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!

1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

மு.வ உரை:
எம்முடைய காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதுஆண்டு அவள்செய் தது.

மு.வ உரை:
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

1280. பெண்ணினால் பெண்மை உடைத்துஎன்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

மு.வ உரை:
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாம லிருக்குமாறு இரத்தல், பெண்தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

------


Back to Top