திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 124                   உறுப்புநலனழிதல்
1231. சிறுமை நமக்குஒழியச் சேண்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

மு.வ உரை:
இத்துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணிவிட்டன.

1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

மு.வ உரை:
பசலைநிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் (பிறர்க்குச்) சொல்வனபோல் உள்ளன.

1233. தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

மு.வ உரை:
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவைபோல் உள்ளன.

1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

மு.வ உரை:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

1235. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

மு.வ உரை:
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு வாடிய தோள்கள், (என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

1236. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

மு.வ உரை:
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றை காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

1237. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்குஎன்
வாடுதோள் பூசல் உரைத்து?

மு.வ உரை:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

1238. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

மு.வ உரை:
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறிதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

1239. முயக்குஇடைத் தண்வளி போழப் பசப்புஉற்ற
பேதை பெருமழைக் கண்.

மு.வ உரை:
தழுவுதலுக்கு இடையே குளிர்ந்த காற்று நுழையக் காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலைநிறம் அடைந்தன.

1240. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

மு.வ உரை:
காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது,

------


Back to Top