மூலம்:
1221 . மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
பரிமேழலகர் உரை:
பொழுதொடு புலந்து சொல்லியது. பொழுது -
பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின்
வந்த மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும்
வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த
மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய்.
(முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்'
எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். 'வாழி' என்பது
குறிப்புச் சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி
அவிழ்க்குங்காலை" (கலித். நெய்தல். 2 )
என்றார்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது.
'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது
ஆகுபெயர். 'வேலை' என்பதற்கு வேலாயிருந்தாய்
'என்பாரும்' உளர்.) ---
மு.வ உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்லை: (காதலரோடு கூடியிருந்து
பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக்
காலமாக இருக்கின்றாய்!
G.U.Pope:
Thou art not evening, but a spear that doth devour
The souls of brides; farewell, thou evening hour!
Explanation
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.
மூலம்:
1222 . புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை?
பரிமேழலகர் உரை:
தன்னுட்கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.
மருள் வாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை -
நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின்
துணை எம் கேள்போல் வன்கண்ணதோ - நின்
துணையும் எம் துணைபோல வன்கண்மையுடையதோ?
கூறுவாயாக.
(மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்;
கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் -
ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக்
கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது.
'எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை,'
என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.) ---
மு.வ உரை:
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல்
துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம்
அற்றதோ?
G.U.Pope:
Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride?
Explanation
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.
மூலம்:
1223 . பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.
பரிமேழலகர் உரை:
ஆற்றல்வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. பனி
அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய
நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்துவந்த
மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள்
எனக்கு இறந்து பாடு வந்து தோன்றி அதற்கு உளதாம்
துன்பம் ஒருகாலைக்கு ஒரு கால் மிக வாரா நின்றது.
(குளிர்ச்சி தோன்ற மயங்கிவரு மாலை என்னுஞ்
செம்பொருள் இக் குறிப்புணர நின்றது. துனி - உயிர்
வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு
என்னை?' என்பது குறிப்பெச்சம்.) ---
மு.வ உரை:
பனி தோன்றிய பசந்த நிறம்கொண்ட மாலைப்பொழுது எனக்கு
வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக
வருகின்றது.
G.U.Pope:
With buds of chilly dew wan evening's shade enclose;
My anguish buds space and all my sorrow grows.
Explanation
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.
மூலம்:
1224 . காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. மாலை - காதலர் உள்ள
பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை;
காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது;
கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து
நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர்
வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது.
(ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம்
எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும்,
இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா
நின்றது. இனியான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.)
---
மு.வ உரை:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர்
வருவதுபோல் மாலைப்பொழுது(என் உயிரைக் கொள்ள)
வருகின்றது.
G.U.Pope:
When absent is my love, the evening hour descends,
As when an alien host to field of battle wends.
Explanation
In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.
மூலம்:
1225 . காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. காலையும், மாலையும், அவர் கூடிய
ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு
வாராநின்றன; அவற்றுள், யான் காலைக்குச் செய்த
நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது?
மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த
அபகாரம் யாது?
(கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய
காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல்
வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும்
கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய
ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து
இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது'
என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்?' என்றும்
கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த
காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம்
செய்யாநின்றது என்பதாம்.) ---
மு.வ உரை:
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத்
துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை
என்ன.?
G.U.Pope:
O morn, how have I won thy grace? thou bring'st relief
O eve, why art thou foe! thou dost renew my grief.
Explanation
What good have I done to morning (and) what evil to evening?
மூலம்:
1226 . மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.
பரிமேழலகர் உரை:
இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு
உடம்பட்டது என்னை?' என்றாட்குச் சொல்லியது.
மாலை நோய் செய்தல் - முன்னெல்லாம் எனக்கு
நட்பாய் இன்பஞ் செய்து போந்த மாலை இன்று
பகையாய்த் துன்பஞ் செய்தலை; மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன் - காதலர் பிரிதற்கு முன்னே
அறியப் பெற்றிலேன். 'இங்ஙனம் வேறுபடுதல்
அறிந்திலேன்; அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு
உடம்படேன்;' என்பதாம்.) ---
மு.வ உரை:
மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக்
காதலர் என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான்
அறியவில்லை.
G.U.Pope:
The pangs that evening brings I never knew,
Till he, my wedded spouse, from me withdrew.
Explanation
Previous to my husband's departure, I know not the painful nature of evening.
மூலம்:
1227 . காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி
மாலை மலரும்இந் நோய்.
பரிமேழலகர் உரை:
மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம்
என்னை?' என்றாட்குச் சொல்லியது. இந்நோய் -
இக்காம நோயாகிய பூ; காலை அரும்பி - காலைப்
பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி -
பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து, மாலை
மலரும் - மாலைப் பொழுதின் கண் மலராநிற்கும்.
(துயிலெழுந்த பொழுதாகலின் கனவின் கண் கூட்டம்
நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும்,
பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி
ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி'
என்றும், தத்தம் துணையை உள்ளி வந்து சேரும்
விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான்
அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை
மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள்.
'பூப்போல இந்நோய் காலவயத்ததாகா நின்றது,'
என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச
உருவகம்.) ---
மு.வ உரை:
இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி,
பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில்
மலராகின்றது
G.U.Pope:
My grief at morn a bud, all day an opening flower,
Full-blown expands in evening hour.
Explanation
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.
மூலம்:
1228 . அழல்போலும் மாலைக்குத் தூதுஆகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. ஆயன் குழல் - முன்னெல்லாம்
இனிதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும்
மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச்
சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும் படை -
அது வந்து என்னைக் கொல்வுழிக் கொல்லும் படையும்
ஆயிற்று.
(பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே
வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின்
படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை,
இத்துணையும் பெற்றால் என் செய்யாது?' என்பதாம்.)
---
மு.வ உரை:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருந்தும் மாலைப்
பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.
G.U.Pope:
The shepherd's pipe is like a murderous weapon, to my ear,
For it proclaims the hour of ev'ning's fiery anguish near.
Explanation
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).
மூலம்:
1229 . பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. 'இதற்கு முன்னெல்லாம் யானே
மயங்கி நோயுழந்தேன்; மதி மருண்டு மாலை
படர்தரும் போழ்து - இனிக் கண்டாரும் மருளும்
வகை வரும்பொழுது; பதி பைதல் உமக்கும்
இப்பகுதியெல்லாம் நோயுழக்கும்.
('மதி மருள' என்பது, 'மதி மருண்டு' எனத் திரிந்து
நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை
படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்'
என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி
நிலைகலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும்
உளர்.) ---
மு.வ உரை:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த
ஊரும் மயங்கி என்னப்போல் துன்பத்தால் வருந்தும்.
G.U.Pope:
If evening's shades, that darken all my soul, extend;
From this afflicted town will would of grief ascend.
Explanation
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.
மூலம்:
1230 . பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. மாயா என் உயிர் - காதலர் பிரிவைப்
பொறுத்த இறந்துபடாதிருந்த என் உயிர்;
பொருண்மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் -
இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை
நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே
இறந்துபடாநின்றது.
('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி
வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு
ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார்;
காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால்
பயனில்லை,' என்பதாம்.) ---
மு.வ உரை:
(பிரிவுத்துன்பத்தால்) மாயாமல் நின்ற என் உயிர், பொருள்
காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைத்து மயங்குகின்ற இம்
மாலைப்பொழுதில் மாய்கின்றது.
G.U.Pope:
This darkening eve, my darkling soul must perish utterly;
Remembering him who seeks for wealth, but seeks not me.
Explanation
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who
has the nature of wealth.