மூலம்:
1211 . காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து ?
பரிமேழலகர் உரை:
தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது. காதலர்
தூதொடு வந்த கனவினுக்கு - யான் வருந்துகின்றது
அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு
என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது
செய்வேன் - விருந்தாக யாதனைச் செய்வேன்?
('விருந்து' என்றது, விருந்திற்குச் செய்யும்
உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின்,
'யாது செய்வேன்' என்றாள்.) ---
மு.வ உரை:
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய
தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து
உதவுவேன்?
G.U.Pope:
It came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare?
Explanation
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?
மூலம்:
1212 . கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயல்உண்மை சாற்றுவேன் மன்.
பரிமேழலகர் உரை:
தூது விடக் கருதியான் சொல்லியது. கயல் உண்கண்
யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என்
கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால்
துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை
சாற்றுவேன் - கனவிடைக் காதல்ரைக் காண்பேன்,
கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை
யானே விரியச் சொல்வேன்.
('கயலுண்கண்' என்றாள், கழிந்த நலத்திற்கு இரங்கி.
உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச்
சொல்லாது யாம் அடக்குவனவும்,
சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பு
தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால்,
'சாற்றுவேன்' என்றாள். இனி, அவையும் துஞ்சா:
சாற்றலுங்கூடாது என்பதுபட நின்றமையின், 'மன்'
ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள்
கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.) ---
மு.வ உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால்,(அப்போது வரும்
கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்
தன்மையைச் சொல்வேன்.
G.U.Pope:
If my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I'll tell my loved one o'er.
Explanation
If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
மூலம்:
1213 . நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டுஎன் உயிர்.
பரிமேழலகர் உரை:
ஆற்றான் எனக் கவன்றாட்கு 'ஆற்றுவல்' என்பதுபடச்
சொல்லியது. நனவினான் நல்காதவரை - நனவின்கண்
வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற்
காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின் கண்
கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது.
(மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன.
'அக்காட்சி யானே யான் ஆற்றியுளேன் ஆகினறேன். 'நீ
கவலல் வேண்டா,' என்பதாம்.) ---
மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில்
காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல்
உள்ளதாகின்றது.
G.U.Pope:
Him, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes!
Explanation
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
மூலம்:
1214 . கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. நனவினான் நல்காரை நாடித்தரற்கு -
நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர்
சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்;
கனவினான் காமம் உண்டாகும் - இக்கனவின்கண்ணே
எனக்கு இன்பம் உண்டாகா நின்றது.
(காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன்
பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை
அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து
தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்'
என்பதாம்.) ---
மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி
அழைத்துக்கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய
காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
G.U.Pope:
Some pleasure I enjoy when him who loves not me
In waking hours, the vision searches out and makes me see.
Explanation
There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.
மூலம்:
1215 . நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்
கண்ட பொழுதே இனிது.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. நனவினான் கண்டதூஉம் இனிது
ஆங்கே- முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த
இன்பந்தானும் இனிதாயிற்று; அப்பொழுதே, கனவும்
தான் கண்டபொழுது இனிது - இன்று கனவின்கண்
கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே
இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.
('இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு -
ஆகுபெயர். 'முன்னும் யான் பெற்றது இவ்வளவே;
இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.) ---
மு.வ உரை:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுதுமட்டும் இனிதாயிற்று;
இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக
உள்ளது.
G.U.Pope:
As what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet.
Explanation
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.
மூலம்:
1216 . நனவுஎன ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. நனவென ஒன்று இல்லையாயின் -
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி
இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் -
கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது.
அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப்
பிரிவித்தது என்பதுபட நின்றமையின் 'மன்'
ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று
ஆற்றுகின்றமை கூறியவாறு.) ---
மு.வ உரை:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால்,
கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
G.U.Pope:
And if there were no waking hour, my love
In d reams would never from my side remove.
Explanation
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
மூலம்:
1217 . நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது?
பரிமேழலகர் உரை:
விழித்துழிக் காணாளாயினாள் கனவிற் கூட்டம்
நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது. நனவினான்
நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து
தலையளி செய்யாது கொடியவர்; கனவினான் எம்மைப்
பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து
எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி?
(பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கி,
'கொடியார்' என்றும், கனவில் தோள்மேலராய்
விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது
என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின்
இல்லது கனவினும் இல்லை' என்பர்; 'அது
கண்டிலம்,' என்பதாம்.) ---
மு.வ உரை:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர்,
கனவில்மட்டும் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
G.U.Pope:
The cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams?
Explanation
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
மூலம்:
1218 . துஞ்சும்கால் தோள்மேலர் ஆகி விழிக்கும்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
பரிமேழலகர் உரை:
தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை
இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது. துஞ்சுங்கால்
தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற
காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள்
மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தராவர் -
பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின்
கண்ணராவர்.
(கலவிவிட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து'
என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ
நோவற்பாலை யல்லை,' என்பதாம்.) ---
மு.வ உரை:
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி,
விழித்தெழும்போது உடனே விரைந்து என் நெஞ்சில்
உள்ளவராகின்றார்.
G.U.Pope:
And when I sleep he holds my form embraced;
And when I wake to fill my heart makes haste!
Explanation
When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.
மூலம்:
1219 . நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
பரிமேழலகர் உரை:
இதுவும் அது. கனவினான் காதலர்க் காணாதவர் -
தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற்
கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் -
தாம் அறிய நனவின் கண் வந்து நல்காத நம் காதலரை
அன்பிலர் என நோவா நிற்பர்.
(இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின்,
அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும்
காதலருளராய் அவரைக் கனவிற் கண்டறிவாராயின்,
நம் காதலர் கனவின் கண் ஆற்றி நல்குதல் அறிந்து
நோவார் என்பதாம்.) ---
மு.வ உரை:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர் நனவில் வந்து அன்பு
செய்யாத காதலரை (அவர் வராத காரணம் பற்றி) நொந்துகொள்வர்.
G.U.Pope:
In dreams who ne'er their lover's form perceive,
For those in waking hours who show no love will grieve.
Explanation
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.
மூலம்:
1220 . நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்ஊ ரவர்?
பரிமேழலகர் உரை:
இதுவும் அது இவ்வூரவர் நனவினான் நம்நீத்தார்
என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று
நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான்
காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல்
கண்டறியாரோ?
('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின்,
யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது
அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளே
யாம்,' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.) --
-
மு.வ உரை:
நனவில் நம்மைவிட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்துப்
பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ!
G.U.Pope:
They say, that he in waking hours has left me lone;
In dreams they surely see him not,- these people of the town;
Explanation
The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.