திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 122                   கனவுநிலையுரைத்தல்
1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து ?

மு.வ உரை:
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

1212. கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயல்உண்மை சாற்றுவேன் மன்.

மு.வ உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால்,(அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.

1213. நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டுஎன் உயிர்.

மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

1214. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக்கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்
கண்ட பொழுதே இனிது.

மு.வ உரை:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுதுமட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

1216. நனவுஎன ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

மு.வ உரை:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

1217. நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது?

மு.வ உரை:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில்மட்டும் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

1218. துஞ்சும்கால் தோள்மேலர் ஆகி விழிக்கும்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

மு.வ உரை:
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழித்தெழும்போது உடனே விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகின்றார்.

1219. நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

மு.வ உரை:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர் நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை (அவர் வராத காரணம் பற்றி) நொந்துகொள்வர்.

1220. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்ஊ ரவர்?

மு.வ உரை:
நனவில் நம்மைவிட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்துப் பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ!

------


Back to Top