மூலம்:
111 . தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பரிமேழலகர் உரை:
தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று
சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு
எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது
ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் 'தகுதி'
என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப்
பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன்
பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது
அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான்
நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால்,
நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
G.U.Pope:
If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -'tis man's one highest gain.
Explanation
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
மூலம்:
112 . செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
பரிமேழலகர் உரை:
செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை
உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு
ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி
அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.
(விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும்
துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது
பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று.
தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்'
என்றார்.).
மு.வ உரை:
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல்
அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறுதியான நன்மை
தருவதாகும்.
G.U.Pope:
The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.
Explanation
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.
மூலம்:
113 . நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
பரிமேழலகர் உரை:
நன்றே தரினும் - தீங்கு அன்றி நன்மையே
பயந்ததாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே
ஒழியவிடல் -நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற
ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. (நன்மை
பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான்
என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு
பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த
செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை
பயத்தலும் கூறப்பட்டன.).
மு.வ உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி
உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
G.U.Pope:
Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain!
Explanation
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.
மூலம்:
114 . தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
பரிமேழலகர் உரை:
தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை
உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும்
விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் -
அவரவருடைய நன்மக்களது உண்மையானும்
இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம்
உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு
தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை
குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும்
அறியுமாறு கூறப்பட்டது.).
மு.வ உரை:
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது
அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
G.U.Pope:
Who just or unjust lived shall soon appear:
By each one's offspring shall the truth be clear.
Explanation
The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.
மூலம்:
115 . கேடும் பெருக்கமும் இல்லல்ல: நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
பரிமேழலகர் உரை:
கேடும் பெருக்கமும் இல் அல்ல - தீவினையால்
கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும்
முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை
சான்றோர்க்கு அணி - அவ்வாற்றை யறிந்து அவை
காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான்
அமைந்தார்க்கு அழகாவது. (அவை காரணமாகக்
கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக்
கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம்
வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல்.
'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல்
அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை
அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்.).
மு.வ உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால்
நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு
அழகாகும்.
G.U.Pope:
The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament.
Explanation
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
மூலம்:
116 . கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.
பரிமேழலகர் உரை:
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன்
தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து
நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான்
கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான்
கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக.
(நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின்,
'செயின்' என்றார்.).
மு.வ உரை:
தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய
நினைக்குமாயின், `நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன்
அறிய வேண்டும்.
G.U.Pope:
If, right deserting, heart to evil turn,
Let man impending ruin's sign discern!
Explanation
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."
மூலம்:
117 . கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
பரிமேழலகர் உரை:
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக
நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை;
கெடுவாக வையாது உலகம் - வறுமை என்று கருதார்
உயர்ந்தோர். (கெடு என்பது முதல்நிலைத்
தொழிற்பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர் என்பது
குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே
கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம்.
கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன்
தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.).
மு.வ உரை:
நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன்
அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.
G.U.Pope:
The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight.
Explanation
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
மூலம்:
118 . சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
பரிமேழலகர் உரை:
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் - முன்னே தான்
சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை
வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி - இலக்கணங்களான்
அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு
அழகு ஆம். (உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர்
தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய
அமைதலும் ஒருபால் கோடாமையும்
உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது
தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான்
உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால்
கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை,
நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக்
கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல்
இருவழியும் ஏற்பன கொள்க.).
மு.வ உரை:
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும்
துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல்
நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
G.U.Pope:
To stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of soul, is sages' praise.
Explanation
To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.
மூலம்:
119 . சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்.
பரிமேழலகர் உரை:
செப்பம் சொற்கோட்டம் இல்லது - நடுவு
நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல்
இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப்
பெறின் (சொல் : ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல்.
காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு
கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு
நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின்
அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது
பெறப்பட்டது. அஃது அன்னதாவது மனத்தின் கண்
கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்
என்றவாறு.).
மு.வ உரை:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப்
பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல்
நடுவுநிலைமையாம்.
G.U.Pope:
Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess.
Explanation
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
மூலம்:
120 . வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
பரிமேழலகர் உரை:
பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும்
தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம்
செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு
நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல்
செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது
குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு
மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை
நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று,
அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச்
சிறந்தமையின்.).
மு.வ உரை:
பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே
வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
G.U.Pope:
As thriving trader is the trader known,
Who guards another's interests as his own.
Explanation
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.