திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       களவியல்

              அதிகாரம்: 114                   நாணுத்துறவுரைத்தல்
1131. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி.

மு.வ உரை:
காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை.

1132. நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து.

மு.வ உரை:
(காதலியன் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு மடலூரத் துணிந்தன.

1133. நாணொடு நல்லாண்மை பண்டுஉடையேன் இன்றுஉடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

மு.வ உரை:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; (காதலியைப் பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

1134. காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

மு.வ உரை:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றது.

1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மு.வ உரை:
மடலேறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்குத் தந்தாள்.

1136. மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்குஎன் கண்.

மு.வ உரை:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன்; காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

1137. கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.

மு.வ உரை:
கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமையுடைய பிறவி இல்லை.

1138. நிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

மு.வ உரை:
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!

1139. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

மு.வ உரை:
அமைதியாய் இருந்ததால் எல்லாரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

1140. யாங்கண்ணின் காண நகுப அறிவுஇல்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

மு.வ உரை:
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால், அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர்.

------


Back to Top