மூலம்:
1121 . பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.
பரிமேழலகர் உரை:
(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு
உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் -
இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய
நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த
கலவை போலும். ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று;
கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால்
அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று.
'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில்
இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய
பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று
அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய
நீர்க்கும் எய்துவிக்க.).
மு.வ உரை:
மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில்
ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
G.U.Pope:
The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow.
Explanation
The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.
மூலம்:
1122 . உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
பரிமேழலகர் உரை:
(பிரிவு அச்சம் கூறியது.) உடம்பொடு உயிரிடை என்ன அன்ன
- உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய?
அத்தன்மைய; மடந்தையொடு எம்மிடை நட்பு -
இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள். ('என்ன'?
எனப் பன்மையாற் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு
வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்பதுன்பங்கள் ஒக்க
அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி.
தெய்வப் புணர்ச்சியாகலான், அதுபொழுது உணர்ச்சியிலள்
ஆகியாள் பின் உடையளாமன்றே?ஆயவழி 'இவன் யாவன்
கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்'? எனவும்,
'இன்னும்இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்'? எனவும்
அவள்மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான்
அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம்
ஓதுவாரும் உளர்.).
மு.வ உரை:
இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள்,
உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ
அத்தன்மையானவை.
G.U.Pope:
Between this maid and me the friendship kind
Is as the bonds that soul and body bind.
Explanation
The love between me and this damsel is like the union of body and soul.
மூலம்:
1123 . கருமணியில் பாவாய்நீ போதாய்:யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
பரிமேழலகர் உரை:
(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.)
கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற்
கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும்
போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை -
போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட
திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான்
காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி
என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு
ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த
இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.).
மு.வ உரை:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடும்!
யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம்
இல்லையே!
G.U.Pope:
For her with beauteous brow, the maid I love, there place is none;
To give her image room, O pupil of mine eye, begone!
Explanation
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.
மூலம்:
1124 . வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல்
அதற்குஅன்னள் நீங்கும் இடத்து.
பரிமேழலகர் உரை:
(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை
உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள்
எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல்
போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் -
பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்;
('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய்
நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி
நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும்
அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.).
மு.வ உரை:
ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு
வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிர்க்குச் சாவு போன்றவள்.
G.U.Pope:
Life is she to my very soul when she draws nigh;
Dissevered from the maid with jewels rare, I die!
Explanation
My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.
மூலம்:
1125 . உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
பரிமேழலகர் உரை:
(ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று
எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.)
ஒள் அமர்க்கண்ணாள் குணம், யான் மறப்பின் உள்ளுவன் -
ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள்
குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு
அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான்
நினைத்தலையும் அறியேன். (மன் : ஒழியிசைக்கண் வந்தது.
குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின.
இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.).
மு.வ உரை:
போர் செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான்
மறந்தால் பிறகு நினைக்க முடியும்; ஆனால், ஒருபோதும்
மறந்ததில்லையே!
G.U.Pope:
I might recall, if I could once forget; but from my heart
Her charms fade not, whose eyes gleam like the warrior's dart.
Explanation
If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).
மூலம்:
1126 . கண்உள்ளின் போகார்: இமைப்பின் பருவரார்:
நுண்ணியர்எங் காத லவர்.
பரிமேழலகர் உரை:
(ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும்
என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம்
காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார்
கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய
காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின்
பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால்
வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா
நுண்ணியர். (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான்
எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்'
என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின்
பருவரார்' என்றும் கூறினாள்.).
மு.வ உரை:
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போகமாட்டார்; கண்ணை மூடி
இமைத்தாலும் அதனால் வருந்தமாட்டார்; அவர் அவ்வளவு
நுட்பமானவர்.
G.U.Pope:
My loved one's subtle form departs not from my eyes;
I wink them not, lest I should pain him where he lies.
Explanation
My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.
மூலம்:
1127 . கண்உள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும்
எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார்
ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்;
கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை
அறிந்து. (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு'
என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது.
'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று
கருதுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.).
மு.வ உரை:
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால், மை
எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும்
எழுதமாட்டோம்!
G.U.Pope:
My love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide.
Explanation
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.
மூலம்:
1128 . நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல்
அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான்
உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்;
வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து.
('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார்
என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.).
மு.வ உரை:
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான
பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான
பொருளை உண்ண அஞ்சுகின்றோம்
G.U.Pope:
Within my heart my lover dwells; from food I turn
That smacks of heat, lest he should feel it burn.
Explanation
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.
மூலம்:
1129 . இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
எதிலர் என்னும்இவ் வூர்.
பரிமேழலகர் உரை:
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற்
பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள்
இயற்பட மொழிந்தது.) இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல் -
என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை
அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் -
அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர்
என்று சொல்லாநிற்கும் இவ்வூர். (தன் கருத்து அறியாமை
பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை
வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்'
பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை',
என்பதாம்.).
மு.வ உரை:
கண் இமைத்தால் காதலர் மறைந்துபோதலை அறிகின்றேன்.
அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று
சொல்லுவர்.
G.U.Pope:
I fear his form to hide, nor close my eyes:
'Her love estranged is gone!' the village cries.
Explanation
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.
மூலம்:
1130 . உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும்: இகந்துஉறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் -
காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா
நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை
அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று
சொல்லாநிற்கும் இவ்வூர். ('உவந்து உறைவர்' என்றதனால்
அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை
இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.).
மு.வ உரை:
G.U.Pope:
Rejoicing in my very soul he ever lies;
'Her love estranged is gone far off!' the village cries.
Explanation
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.