மூலம்:
1111 . நல்நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல்நீரள் யாம்வீழ் பவள்.
பரிமேழலகர் உரை:
(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே
வாழி நன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால்
நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம்
வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால்
விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை
உடையவள். (அனிச்சம்: ஆகுபெயர், 'வாழி' என்பது
உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும்
தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது
உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனி்மையையே பாராட்டினான்,
'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).
மு.வ உரை:
அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ
வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை
உடையவள்.
G.U.Pope:
O flower of the sensitive plant! than thee
More tender's the maiden beloved by me.
Explanation
May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.
மூலம்:
1112 . மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
பரிமேழலகர் உரை:
(இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே;
இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே
காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள்
ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை
குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா
நின்றாய், நின்அறிவு இருந்தவாறென்? (மையாத்தல்: ஈண்டு
ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல்
செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி
நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப்
பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக்
கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான்,
இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை
இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள்
ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து
கூறியவாறு.).
மு.வ உரை:
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை
ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ
மயங்குகின்றாய்!
G.U.Pope:
You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
That many may see; it was surely some folly that over you stole!
Explanation
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.
மூலம்:
1113 . முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு.
பரிமேழலகர் உரை:
(கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு
கூறியது.) வேய்த்தோளவட்கு - வேய் போலும்
தோளினையுடையவட்கு; மேனி முறி - நிறம் தளிர்
நிறமாயிருக்கும்; முறுவல் முத்தம் - பல் முத்தமாயிருக்கும்;
நாற்றம் வெறி - இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்;
உண்கண் வேல் - உண்கண்கள் வேலாயிருக்கும்
(பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல்
என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின்,
புனைந்துரையாயிற்று, 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்'
என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம்
ஆம்.).
மு.வ உரை:
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி;
முத்தே பல்; இயற்கை மணமே மணம்; வேலே மை உண்ட கண்.
G.U.Pope:
As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;
Darts are the eyes of her whose shoulders like the bambu bend.
Explanation
The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.
மூலம்:
1114 . காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ஒவ்வேம் என்று.
பரிமேழலகர் உரை:
(பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது.)
குவளை - குவளைப் பூக்கள் தாமும்; காணின் - காண்டல்
தொழிலையுடையவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று
கவிழ்ந்து நிலன் நோக்கும் - மாண்ட இழையினை உடையாள்
கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி அந்நாணினால்
இறைஞ்சி நிலத்தினை நோக்கும். (பண்பானேயன்றித்
தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்'என்றும்,
கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது
தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும்
இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.) .
மு.வ உரை:
குவளை மலர்கள் காணும் தன்மைபெற்றுக் கண்டால்,
"இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே" என்று
தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
G.U.Pope:
The lotus, seeing her, with head demiss, the ground would eye,
And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie.'
Explanation
If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."
மூலம்:
1115 . அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.
பரிமேழலகர் உரை:
(பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது.) அனிச்சப்பூக்
கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது
அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல
பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.
(அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும்.
முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே
படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும்
இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.).
மு.வ உரை:
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு
களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய
இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.
G.U.Pope:
The flowers of the sensitive plant as a girdle around her she placed;
The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist.
Explanation
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.
மூலம்:
1116 . மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
பரிமேழலகர் உரை:
(இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) மீன் - வானத்து
மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு
பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும்
இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய
- தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன. (ஓரிடத்து
நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய'
என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி
'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது
கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.).
மு.வ உரை:
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு
கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித்
திரிகின்றன.
G.U.Pope:
The stars perplexed are rushing wildly from their spheres;
For like another moon this maiden's face appears.
Explanation
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.
மூலம்:
1117 . அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுஉண்டோ மாதர் முகத்து.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக்
காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல -
முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண்
போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு
உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை
மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை
பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து
கூறியவாறு.).
மு.வ உரை:
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற
திங்களிடம் உள்ளதுபோல் இந்த மாதர் முகத்தில் களங்கம்
உண்டோ? இல்லையே!
G.U.Pope:
In moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here?
Explanation
Could there be spots in the face of this maid like those in the bright full moon ?
மூலம்:
1118 . மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி !
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர்
முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை -
இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச
வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி ('மறு
உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால்
காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.).
மு.வ உரை:
திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால்
முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை
பெறுவாய்.
G.U.Pope:
Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine.
Explanation
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?
மூலம்:
1119 . மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி !
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம்
ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள்
முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் -
இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத்
தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு
அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை
இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு
உண்டாகாது என்பதாம்.).
மு.வ உரை:
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை
ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.
G.U.Pope:
If as her face, whose eyes are flowers, thou wou ldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see!
Explanation
O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.
மூலம்:
1120 . அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
பரிமேழலகர் உரை:
(உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி
மறுத்தது.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான்
மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின்
சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் -
மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும். (முன்
வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி
'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற்'களையுடைய
(அகநா.களிற்.5)வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது
குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப்
பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும்
இவ்வதிகாரத்ததாயிற்று.).
மு.வ உரை:
அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள்
மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
G.U.Pope:
The flower of the sensitive plant, and the down on the swan's white breast,
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed.
Explanation
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.