திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       களவியல்

              அதிகாரம்: 112                   நலம்புனைந்துரைத்தல்
1111. நல்நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல்நீரள் யாம்வீழ் பவள்.

மு.வ உரை:
அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்.

1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

மு.வ உரை:
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்!

1113. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு.

மு.வ உரை:
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி; முத்தே பல்; இயற்கை மணமே மணம்; வேலே மை உண்ட கண்.

1114. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ஒவ்வேம் என்று.

மு.வ உரை:
குவளை மலர்கள் காணும் தன்மைபெற்றுக் கண்டால், "இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே" என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

மு.வ உரை:
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

1116. மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

மு.வ உரை:
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுஉண்டோ மாதர் முகத்து.

மு.வ உரை:
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளதுபோல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லையே!

1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி !

மு.வ உரை:
திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

1119. மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி !

மு.வ உரை:
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

மு.வ உரை:
அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

------


Back to Top