மூலம்:
1101 . கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.
பரிமேழலகர் உரை:
(இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) கண்டு கேட்டு
உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் -கண்ணால்
கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால்
மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும்
ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய
தொடியை உடையாள் கண்ணே உளவாயின. (உம்மை, முற்று
உம்மை, தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி
நின்றது.வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான்
அனுபவிக்கப்படுவன ஒரு காலத்து இவள் கண்ணே
அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப்
பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு
அடக்கிக் கூறப்பட்டன.).
மு.வ உரை:
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து
புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல்
அணிந்த இவளிடத்தில் உள்ளன.
G.U.Pope:
All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
In this resplendent armlets-bearing damsel live!
Explanation
The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).
மூலம்:
1102 . பிணிக்கு மருந்து பிறமன்: அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
பரிமேழலகர் உரை:
(இடந்தலைப் பாட்டின்கண் சொல்லியது) பிணிக்கு மருந்து பிற
- வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு
நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்;
அணியிழை தன்நோய்க்கு மருந்து தானே - அவ்வாறன்றி
இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு
மருந்தும் தானேயாயினாள். (இயற்கைப் புணர்ச்சியை
நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும்,
அவ்வருத்தந் தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத்,
தீர்ந்தானாகலின் 'தானே மருந்து' என்றும் கூறினான்.
இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப்பெற்றிலம் என்பதுபட
நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.).
மு.வ உரை:
நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன;
ஆனால், அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே
மருந்தாக இருக்கின்றாள்.
G.U.Pope:
Disease and medicine antagonists we surely see;
This maid, to pain she gives, herself is remedy.
Explanation
The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.
மூலம்:
1103 . தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
பரிமேழலகர் உரை:
(நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு
இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குத் தலைவன்
சொல்லியது.) தாம் வீழ்வார் மென்தோள் துயிலின்
இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம்
விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்
போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு
- அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால்
உலகம். (ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய்
நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத்
தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு
ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான்.
இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர்.
தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின்,
அஃது உரையன்மையறிக.).
மு.வ உரை:
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின்
மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை
உடையதோ?
G.U.Pope:
Than rest in her soft arms to whom the soul is giv'n,
Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?
Explanation
Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?
மூலம்:
1104 . நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
பரிமேழலகர் உரை:
(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின்
தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச்
சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய
தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள்
எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின்
தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால்
தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு
இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான்.
தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான்,
அவளான் அது வெளிப்படுதலின்.).
மு.வ உரை:
நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது;
இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்?
G.U.Pope:
Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fi re obtain?
Explanation
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?
மூலம்:
1105 . வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
பரிமேழலகர் உரை:
(தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) வேட்ட
பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய
பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த
பொழுதின்கண் அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு
போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் -
எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த
கூந்தலின் யுடையாள் தோள்கள். (தோடு: ஆகுபெயர்.
இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டத்துக்கண்
முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம்
பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான்.
தொழிலுவமம்.).
மு.வ உரை:
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான
பொருள்களை நினைந்து விரும்பிய பொழுது அவ்வப்பொருள்களைப்
போலவே இன்பம் செய்கின்றன.
G.U.Pope:
In her embrace, whose locks with flowery wreaths are bound,
Each varied form of joy the soul can wish is found.
Explanation
The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).
மூலம்:
1106 . உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்-
தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும்
தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின்
இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர்
அமிழ்தினால் செய்யப்பட்டன. (ஏதுவாகலான் தீண்டல்
அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி,
'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் -
இன்பத்தால் தழைத்தல்.).
மு.வ உரை:
பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால்
இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
G.U.Pope:
Ambrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again!
Explanation
The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.
மூலம்:
1107 . தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
பரிமேழலகர் உரை:
(இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது
பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற
தோழிக்குச் சொல்லியது ) அம்மா அரிவை முயக்கம் - அழகிய
மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்; தம்மில்
இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற்கண்
தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த
பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப்
பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். (தொழில் உவமம்.
'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு
இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான்
கூறியவாறாயிற்று).
மு.வ உரை:
அழகிய மாமை நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய
வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுத்துக் கொடுத்து உண்டாற்
போன்றது.
G.U.Pope:
As when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace.
Explanation
The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).
மூலம்:
1108 . வீழும் இருவர்க்கு இனிதே வளிஇடை
போழப் படாஅ முயக்கு.
பரிமேழலகர் உரை:
(ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே
இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ
சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு -
ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத
முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர்
விழைவார் இருவர்க்கும் இனிதே. (முற்று உம்மை
விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது.
'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது'
என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு
உடன்படான் கூறியவாறு.).
மு.வ உரை:
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை
ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்.
G.U.Pope:
Sweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds.
Explanation
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.
மூலம்:
1109 . ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
பரிமேழலகர் உரை:
(கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே
இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச்
சொல்லியது.) ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி
இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை
அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய
அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார்
பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது
எய்தியவர் பெற்ற பயன்கள்? ('ஆடவர்க்குப் பிரிவு என்பது
ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும்,
அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவவூடலைத் தவறு
செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும்
அவ்விருவரும் ஒத்த அன்பினரய்க் கூடலுமன்றே
முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப்
புள்ளின் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா', என
அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.).
மு.வ உரை:
ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய
இவை காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர் பெற்ற பயன்களாகும்.
G.U.Pope:
The jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained.
Explanation
Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.
மூலம்:
1110 . அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
பரிமேழலகர் உரை:
(புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது.)
அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும்
நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய முன்னை அறியாமை
கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச்
செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை
இடைவிடாது செறியச்செறிய இவள்மாட்டுக் காதல்.
(களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப்பெறாது
அவாவுற்றான், இதுபொழுது நிரந்தரமாக எய்தப்
பெற்றமையின், 'செறிதோறும்'என்றார். அறிவிற்கு எல்லை
இன்மையான், மேன்மேல் அறியஅறிய முன்னையறிவு
அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு
எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு
செறியாமையாய் முடியாநின்றது எனத்தன் ஆராமை
கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும்
உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது
கூற்றான் நிகழாமை அறிக.).
மு.வ உரை:
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும்
காதல் உணர்தல், நூற்பொருள்களை அறிய அறிய அறியாமை
கண்டாற் போன்றது.
G.U.Pope:
The more men learn, the more their lack of learning they detect;
'Tis so when I approach the maid with gleaming jewels decked.
Explanation
As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).