மூலம்:
1091 . இருநோக்கு இவள்உண்கண் உள்ளது: ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.
பரிமேழலகர் உரை:
(தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள்
நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு
நோக்கு - இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது
பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய்
நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு
என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு
மருந்தாய நோக்கு. (உண்கண்: மையுண்ட கண். நோய்
செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண்
நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப்
பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின்
கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ்
வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.).
மு.வ உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப் பட்ட
நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்;
மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
G.U.Pope:
A double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again.
Explanation
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.
மூலம்:
1092 . கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள்
கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய
நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு
புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும். (தான்
நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று
நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது
உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல்
ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும்
கூறினான்.).
மு.வ உரை:
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை
காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும்.
G.U.Pope:
The furtive glance, that gleams one instant bright,
Is more than half of love's supreme delight.
Explanation
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).
மூலம்:
1093 . நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
பரிமேழலகர் உரை:
(நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான்
நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்;
நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு
நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் -
அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர
அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று. (அஃது என்னும்
சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல்
நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச
உருவகம்.).
மு.வ உரை:
என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித் தலைகுனிந்தாள்;
அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
G.U.Pope:
She looked, and looking drooped her head:
On springing shoot of love 'its water shed!
Explanation
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.
மூலம்:
1094 . யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
பரிமேழலகர் உரை:
(நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) யான்
நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை
நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை
நோக்காநிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் -
அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித்
தன்னுள்ளே மகிழா நிற்கும். (மெல்ல வெளிப்படாமல்,
மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல
நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.).
மு.வ உரை:
யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான்
நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள்
மகிழ்வாள்.
G.U.Pope:
I look on her: her eyes are on the ground the while:
I look away: she looks on me with timid smile.
Explanation
When I look, she looks down; when I do not, she looks and smiles gently.
மூலம்:
1095 . குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே
குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச்
சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே
மகிழா நிற்கும். (சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம்,
சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட
நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது
சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது
குறிப்பெச்சம்.).
மு.வ உரை:
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல்,
ஒரு கண்ணைச் சுருக்கினவள்போல் என்னைப் பார்த்துத் தனக்குள்
மகிழ்வாள்.
G.U.Pope:
She seemed to see me not; but yet the maid
Her love, by smiling side-long glance, betrayed.
Explanation
She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.
மூலம்:
1096 . உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
பரிமேழலகர் உரை:
(தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன்
தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் -
புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்;
செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச்
செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின்
அறியப்படும். (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி
உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்'
எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக்
கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல்
மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.).
மு.வ உரை:
புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும்
அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில்
அறியப்படும்.
G.U.Pope:
Though with their lips affection they disown,
Yet, when they hate us not, 'tis quickly known.
Explanation
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.
மூலம்:
1097 . செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய்
முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் -
அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி
நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர்
போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன.
(குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச்
செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச
வேண்டா என்பதாம்.).
மு.வ உரை:
பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்க்கும்
பார்வையும் புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு
கொண்டவரின் குறிப்பாகும்.
G.U.Pope:
The slighting words that anger feign, while eyes their love reveal.
Are signs of those that love, but would their love conceal.
Explanation
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.
மூலம்:
1098 . அசைஇயற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
பரிமேழலகர் உரை:
(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன்
கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை
அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி
அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்;
அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால்
நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே
தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்:
ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.).
மு.வ உரை:
யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச்
சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு
அப்போது ஓர் அழகு உள்ளது.
G.U.Pope:
I gaze, the tender maid relents the while;
And, oh the matchless grace of that soft smile!
Explanation
When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.
மூலம்:
1099 . ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.
பரிமேழலகர் உரை:
(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார்
போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல
ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார்
கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே
உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு
தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும்,
இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு
வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற்
கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல
உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக்
'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார்
போல' என்றும் கூறினாள்.).
மு.வ உரை:
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு
பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.
G.U.Pope:
The look indifferent, that would its love disguise,
Is only read aright by lovers' eyes.
Explanation
Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.
மூலம்:
1100 . கண்ணோடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் -
காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர்
கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன
பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற
வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல. (நோக்கால்
ஒத்தல்: காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்:
மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள்.
இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக்
கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல்
மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில்
சொற்களாகலின்,இவை கொள்ளப்படா என்பதாம். இவை
புணர்தல் நிமித்தம்.).
மு.வ உரை:
கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.
G.U.Pope:
When eye to answering eye reveals the tale of love,
All words that lips can say must useless prove.
Explanation
The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).