திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       களவியல்

              அதிகாரம்: 110                   குறிப்பறிதல்
1091. இருநோக்கு இவள்உண்கண் உள்ளது: ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.

மு.வ உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப் பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

மு.வ உரை:
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும்.

1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

மு.வ உரை:
என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித் தலைகுனிந்தாள்; அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

1094. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

மு.வ உரை:
யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

மு.வ உரை:
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள்போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.

1096. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

மு.வ உரை:
புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

மு.வ உரை:
பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

1098. அசைஇயற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

மு.வ உரை:
யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.

மு.வ உரை:
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.

1100. கண்ணோடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

மு.வ உரை:
கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

------


Back to Top