மூலம்:
101 . செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.
பரிமேழலகர் உரை:
செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர்
உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த
உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது -
மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக்
கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம்
காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு
ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று
பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச்
செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).
மு.வ உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த
உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக்
கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
G.U.Pope:
Assistance given by those who ne'er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid.
Explanation
(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.
மூலம்:
102 . காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
பரிமேழலகர் உரை:
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த
எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது
எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச்
சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க
நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம்
நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம்.
'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.).
மு.வ உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும்,
அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாகும்.
G.U.Pope:
A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth.
Explanation
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.
மூலம்:
103 . பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
பரிமேழலகர் உரை:
பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு
இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல்
இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை
ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை
கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும்
முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம்,
காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச்
செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.).
மு.வ உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த
உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை
கடலைவிடப் பெரிதாகும்.
G.U.Pope:
Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'T is vaster than the sea.
Explanation
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
மூலம்:
104 . தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
பரிமேழலகர் உரை:
தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத்
தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன்
செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன்
தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது,
பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன்
தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை
பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின்
பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.).
மு.வ உரை:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன்
பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு
போற்றுவர்.
G.U.Pope:
Each benefit to those of actions' fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem.
Explanation
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.
மூலம்:
105 . உதவி வரைத்தன்று உதவி: உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
பரிமேழலகர் உரை:
உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி,
காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய
மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று;
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச்
செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.
'(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு
பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார்.
இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி
மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம்
என்பது கூறப்பட்டது.).
மு.வ உரை:
கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை
உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற
அளவை உடையதாகும்.
G.U.Pope:
The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.
Explanation
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.
மூலம்:
106 . மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
பரிமேழலகர் உரை:
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக்
காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை
விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க -
அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை
மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை.
இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும்
உடன் கூறினார்.).
மு.வ உரை:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த
காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும்
விடலாகாது.
G.U.Pope:
Kindness of men of stainless soul remember evermore!
Forsake thou never friends who were thy stay in sorrow sore!
Explanation
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
மூலம்:
107 . எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
பரிமேழலகர் உரை:
தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய
துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு
பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம்
எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.
('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு
பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப்
பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு
தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது
துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு
பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை
இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது
என்பது கூறப்பட்டது,).
மு.வ உரை:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு
வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
G.U.Pope:
Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise.
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
Explanation
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
மூலம்:
108 . நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
பரிமேழலகர் உரை:
நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த
நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று
அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த
தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.
(இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும்
மறவாததும் வகுத்துக் கூறியவாறு.).
மு.வ உரை:
ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர்
செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்
ஆகும்.
G.U.Pope:
'Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, 'tis good to rid thy memory that very day.
Explanation
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).
மூலம்:
109 . கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
பரிமேழலகர் உரை:
கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு
நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த
இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த
நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர்
செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம்.
(தினைத்துணை பனைத்துணையாகக்
கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே
அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால்
நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற
துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை
நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
G.U.Pope:
Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.
Explanation
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.
மூலம்:
110 . எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
பரிமேழலகர் உரை:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய
அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும்
வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு
இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த
மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச்
சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர்
கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும்
(புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால்
செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.).
மு.வ உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்;
ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
G.U.Pope:
Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!
Explanation
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.