மூலம்:
1081 . அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
பரிமேழலகர் உரை:
(தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச்
சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழை
- இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் -
இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில்
கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல் - அன்றி
ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும் - இவளை இன்னள்
என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. (ஓ -
அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து
படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும்
ஆம். 'கனங்குழை': ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம்
ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர்.
எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்'
என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி,
'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும்
அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும்
கூறினார்.).
மு.வ உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!
G.U.Pope:
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
Is she a maid of human kind? All wildered is my mind!
Explanation
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.
மூலம்:
1082 . நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்குஅணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.
பரிமேழலகர் உரை:
(மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள்
நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர்
நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என்
நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு
தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி
வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும்
கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து. (மேலும்,
'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான்,
இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல்என்றமையின்,
அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும்
குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்'
என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும்
உளர்.).
மு.வ உரை:
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையயும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
G.U.Pope:
She of the beaming eyes, To my rash look her glance replies,
As if the matchless goddess' hand Led forth an armed band.
Explanation
This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.
மூலம்:
1083 . பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை: இனிஅறிந்தேன்
பெண்தகையால் பேரமர்க் கட்டு.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் -
கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு
அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது
கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது
பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து.
(பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும்
குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன.
அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை.
பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம்
பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.).
மு.வ உரை:
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.
G.U.Pope:
Death's form I formerly Knew not; but now 'tis plain to me;
He comes in lovely maiden's guise, With soul-subduing eyes.
Explanation
I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.
மூலம்:
1084 . கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண்
தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார்
உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார்
உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன.
(அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும்
ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.).
மு.வ உரை:
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
G.U.Pope:
In sweet simplicity, A woman's gracious form hath she;
But yet those eyes, that drink my life, Are with the form at strife!
Explanation
These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.
மூலம்:
1085 . கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல்
உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல்
உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக
வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்;
மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல்
கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும்
உடைத்தாயிரா நின்றது. (இன்பமும் துன்பமும் ஒருங்கு
செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை
உவமம்.).
மு.வ உரை:
எமனோ? கண்ணோ? பெண்மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.
G.U.Pope:
The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?
Or fawn's shy glance? All three appear In form of maiden here.
Explanation
Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?
மூலம்:
1086 . கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
செய்யல மன்இவள் கண்.
பரிமேழலகர் உரை:
(இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா
நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய்
விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல -
அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச்
செய்யமாட்டா. (நட்டாரைக் கழறுவார்க்குத் தாம்
செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும்,
செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று
விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து
அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான்.
நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக்
கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று
இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன்
ஒழியிசைக்கண் வந்தது.).
மு.வ உரை:
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
G.U.Pope:
If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart.
Explanation
Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.
மூலம்:
1087 . கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
பரிமேழலகர் உரை:
(அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா
முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட
துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை
கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட
முகபடாத்தினை ஒக்கும். (கண்ணை மறைத்தல் பற்றிக்
'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை
மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின்
வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன
இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை'
என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும்
என்பது தோன்ற நின்றது.).
மு.வ உரை:
மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.
G.U.Pope:
As veil o'er angry eyes Of raging elephant that lies,
The silken cincture's folds invest This maiden's panting breast.
Explanation
The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.
மூலம்:
1088 . ஒள்நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.
பரிமேழலகர் உரை:
(நுதலினாய வருத்தம் கூறியது.) ஞாட்பினுள் நண்ணாரும்
உட்கும் என் பீடு - போர்க்களத்து வந்து நேராத பகைவரும்
நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி; ஒள்
நுதற்குஓ உடைந்தது - இம்மாதரது ஒள்ளிய
நுதலொன்றற்குமே அழிந்து விட்டது. ('மாதர்' என்பது
அதிகாரத்தான் வந்தது. 'ஞாட்பினுள்' என்றதானல்,
பகைவராதல் பெற்றாம்.. 'பீடு' என்ற பொதுமையான்
மனவலியும் காய வலியும் கொள்க. 'ஓ' என்னும்
வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது
சிறுமையும் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின்,
தற்புகழ்தல் அன்றாயிற்று.).
மு.வ உரை:
போரக்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!
G.U.Pope:
Ah! woe is me! my might, That awed my foemen in the fight,
By lustre of that beaming brow Borne down, lies broken now!
Explanation
On her bright brow alone is destroyed even th at power of mine that used to terrify the most fearless foes in the battlefield.
மூலம்:
1089 . பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து.
பரிமேழலகர் உரை:
(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர்
மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை
ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய
இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய
இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப்
படைத்து அணிதல் என்ன பயனுடைத்து? (மடநோக்கு -
வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும் எனக்கு
அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்'
என்பதாம்.).
மு.வ உரை:
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?
G.U.Pope:
Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?
Explanation
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?
மூலம்:
1090 . உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
பரிமேழலகர் உரை:
(தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது.) அடுநறா -
அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார்
மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார்
மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு
மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று. (அடுநறா:
வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு
இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண்
தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே
எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான்
அதுபெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க.
'அரிமயிர்த் திரள் முன்கை'(புறநா.11)என்னும் புறப்பாட்டிற்
குறிப்புப் போல.).
மு.வ உரை:
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை
G.U.Pope:
The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;
But love hath rare felicity For those that only see!
Explanation
Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.