மூலம்:
1071 . மக்களே போல்வர் கயவர்: அவரன்ன
ஒப்பாரி் யாம்கண்டது இல்.
பரிமேழலகர் உரை:
மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும்
மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பார் யாம்
கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு
வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை.
(முழுதும் ஒத்தல் தேற்றே காரத்தால் பெற்றாம்.
'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை.
மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின்,
குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை
அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது
குற்றமிகுதி கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது
போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும்
யாம் கண்டதில்லை.
G.U.Pope:
The base resemble men in outward form, I ween;
But counterpart exact to them I've never seen.
Explanation
The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).
மூலம்:
1072 . நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்:
நெஞ்சத்து அவலம் இலர்.
பரிமேழலகர் உரை:
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் -
தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ்
மக்கள் நன்மையுடையார்; நெஞ்சத்து அவலம் இலர் -
அவர் போல அவை காரணமாகத்தம் நெஞ்சத்தின்கண்
கவலையிலராகலான்.
(நன்று என்பது சாதியொருமை உறுதிகளாவன,
இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற
ஞானங்கள். இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே
'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற
இவை தமக்கு இடையூறு வருங்கொல் என்றும்,
இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை
என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும்,
இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப்புகழ்
முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும்
யாதும் கவலை உடையரல்லராகலாம், 'திருவுடையர்'
எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி
முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.) _---
மு.வ உரை:
நன்மை அறிந்தவரைவிடக் கயவரே நல்ல பேறு உடையவர்; ஏன்
என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை
இல்லாதவர்.
G.U.Pope:
Than those of grateful heart the base must luckier be,
Their minds from every anxious thought are free!
Explanation
The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).
மூலம்:
1073 . தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.
பரிமேழலகர் உரை:
தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு
தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்
- அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை
நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச்
செய்தொழுகலான்.
(உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு
குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார்
போன்று பழித்தவாறாயிற்று. இதனான்,
விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கயவரும் தேவரைப் போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து
மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
G.U.Pope:
The base are as the Gods; they too
Do ever what they list to do!
Explanation
The base resemble the Gods; for the base ac t as they like.
மூலம்:
1074 . அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
பரிமேழலகர் உரை:
கீழ்-கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் -
தன்னிற் சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக்
கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் -
அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு
அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும்.
(அகப்பட்டி; அகமாகிய பட்டி; பட்டி போன்று
வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார்;
''நோதக்க செய்யும் சிறுபட்டி'' (கலித். குறிஞ்சி.15)
என்றார் பிறரும்.) ---
மு.வ உரை:
கீழ்மக்கள் தமக்குக் கீழ்ப்பட்டவராய் நடப்பவரைக் கண்டால்,
அவரைவிடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
G.U.Pope:
When base men those behold of conduct vile,
They straight surpass them, and exulting smile.
Explanation
The base feels proud when he sees persons whose acts meaner than his own.
மூலம்:
1075 . அச்சமே கீழ்களது ஆசாரம்: எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.
பரிமேழலகர் உரை:
கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம்
கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான்
ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா
உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால்
அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது
உண்டாம்.
(ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும்,
அவாவப் படுவதனை 'அவா' என்றும் கூறினார்.
'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண்
தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை
பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக
உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு;
ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கீழ்மக்களின் ஆசாரத்திற்குக் காரணமாக இருப்பது அச்சமே;
எஞ்சியவற்றில், அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம்
உண்டாகும்.
G.U.Pope:
Fear is the base man's virtue; if that fail,
Intense desire some little may avail.
Explanation
(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.
மூலம்:
1076 . அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்.
பரிமேழலகர் உரை:
தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் -
தாம் கேட்டமறைகளை இடந்தோறும் தாங்கிக் கொண்டு
சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை
அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர்.
(மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று
பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர்,
அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு
அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன்
கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும்
கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான்,
இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு
வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை
போன்றவர்.
G.U.Pope:
The base are like the beaten drum; for, when they hear
The sound the secret out in every neighbour's ear.
Explanation
The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.
மூலம்:
1077 . ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
பரிமேழலகர் உரை:
கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர்
அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக
வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு; ஈர்ங்கை
விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத்தெறித்தல்
வேண்டும் என்று இரந்தாலும் தெறியார்.
(வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு
யாதும் கொடார்; நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்'
என்பதாம்.) ---
மு.வ உரை:
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி வளைந்த கை
உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும்
உதறமாட்டார்.
G.U.Pope:
From off their moistened hands no clinging grain they shake,
Unless to those with clenched fist their jaws who break.
Explanation
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.
மூலம்:
1078 . சொல்லப் பயன்படுவர் சான்றோர்: கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
பரிமேழலகர் உரை:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் - மெலியர் சென்று
தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப்
பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப்
பயன்படும் - மறைக் கீழாயினார் கரும்பு போல
வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர்.
(பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது
இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
அணுகிக்குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்;
கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
G.U.Pope:
The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.
Explanation
The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.
மூலம்:
1079 . உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
பரிமேழலகர் உரை:
உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர்
செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு
அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்;
பிறர்மேல்வடுக்காணவற்றாகும் - அவற்றைப் பொறாது
அவர்மாட்டு வடுவில்லையாகவும்
உண்டாக்கவல்லனாம்.
(உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில்
மேல் நின்றன; அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய
பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட
துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்'
என்றும், கேட்டார் இது கூடும் என்று
இயையப்படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்'
என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம்
பொறாமை கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கீழ்மகன் பிறர் உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர்மேல்
பொறாமைகொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண
வல்லவனாவான்.
G.U.Pope:
If neighbours clothed and fed he see, the base
Is mighty man some hidden fault to trace?
Explanation
The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.
மூலம்:
1080 . எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
பரிமேழலகர் உரை:
கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர்
- கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால்
அதுவே பற்றுக் கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு
விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேற
எத்தொழிற்கு உரியர்?
(உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற
துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்'
என்றும். கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா
என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து'
என்றும் கூறினார். ஒகு தொழிற்கும் உரியரல்லர்
என்பது குறிப்பெச்சம். இதனான் தாம் பிறர்க்கு
அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கயவர் எதற்கு உரியவர்? ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில்
அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு
உரியவர் ஆவர்.
G.U.Pope:
For what is base man fit, if griefs assail?
Himself to offer, there and then, for sale!
Explanation
The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?