மூலம்:
1061 . கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.
பரிமேழலகர் உரை:
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்
இரவாமை - தமக்கு உள்ளது கரவாது 'இவர்
வரப்பெற்றோம்' என்று உள்மகிழ்ந்து கொடுக்கும்
கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன்
வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம்
எய்தலின் கோடி மடங்கு நன்று.
(நல்குரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது
என்பதுபட நின்றமையின். உம்மை உயர்வுச்
சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது
என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின்,
வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது
என்பது கருத்து.) ---
மு.வ உரை:
உள்ளதை ஒளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல்
சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு
நல்லது.
G.U.Pope:
Ten million-fold 'tis greater gain, asking no alms to live,
Even from those, like eyes in worth, who nought concealing gladly give.
Explanation
Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.
மூலம்:
1062 . இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்.
பரிமேழலகர் உரை:
உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
- இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண்
வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி,
இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்;
பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப்
போன்று எங்கும் அலமந்து கெடுவானாக.
(மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு
வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய
செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங்
கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள்
சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக்
கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும்
அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு
பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு
ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து
கெடுவானாக!
G.U.Pope:
If he that shaped the world desires that men should begging go,
Through life's long course, let him a wanderer be and perish so.
Explanation
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.
மூலம்:
1063 . இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.
பரிமேழலகர் உரை:
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் - வறுமையான் வருந்துன்பத்தை முயன்று
நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம்
என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல் -
வலிமைப்பாடுடையது பிறிது இல்லை.
(நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான்
தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு -
முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல்.
இதனான் 'வறுமைத் தீர்தற்கு நெறி இரவன்று' என்பது
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று கருதி
முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு
இல்லை.
G.U.Pope:
Nothing is harder than the hardness that will say,
'The plague of penury by asking alms we'll drive away.'
Explanation
There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).
மூலம்:
1064 . இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்
காலும் இரவுஓல்லாச் சால்பு.
பரிமேழலகர் உரை:
இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு -
நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும்
பிறர்பாற்சென்று இரத்தலை உடம்படாத அமைதி;
இடமெல்லாம் கொள்ளா தகைத்தே - எல்லாவுலகும்
ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து.
(அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு
ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான்
அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
வாழ வழி இல்லாத போதும் இரந்துகேட்க உடன்படாத சால்பு,
உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு
பெருமையுடையதாகும்.
G.U.Pope:
Who ne'er consent to beg in utmost need, their worth
Has excellence of greatness that transcends the earth.
Explanation
Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.
மூலம்:
1065 . தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல்.
பரிமேழலகர் உரை:
தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் -
நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர்
போலும் அடுபுற்கையே யாயினும்; உண்ணலின் ஊங்கு
இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது
இல்லை.
(தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர்
போன்றதாயினும், இழிவாய இரவான் வந்ததன்றித் தம்
உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம்.
இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும்
இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால்
கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும்
இல்லை.
G.U.Pope:
Nothing is sweeter than to taste the toil-won cheer,
Though mess of pottage as tasteless as the water clear.
Explanation
Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.
மூலம்:
1066 . ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.
பரிமேழலகர் உரை:
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது
இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு,
அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல் வேண்டும் என்று
இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு
இளிவந்தது இல் - அவ்விரவு போல ஒருவன் நாவிற்கு
இளிந்தது பிறிது இல்லை.
(ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும்,
பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத
எண்மைத்தாகலின் 'நீர்' என்றும் இரக்கின்றானுக்கு
இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும்,
அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி
வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும்
முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும்
அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.
G.U.Pope:
E'en if a draught of water for a cow you ask,
Nought's so distasteful to the tongue as beggar's task.
Explanation
There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.
மூலம்:
1067 . இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று!
பரிமேழலகர் உரை:
இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம்
யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின்
என்று - 'யாது சொல்லி?' எனின், நுமக்கு இரக்க
வேண்டுமாயின் தமக்குள்ளது கரப்பாரை
இரவாதொழிமின் என்று சொல்லி,
(இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த
செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின்,
இது வேண்டா என்பது தோன்ற, 'இரப்பன்' என்றார்.
இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.) --
-
மு.வ உரை:
இரந்து கேட்பதானால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று
இரக்கவேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து
வேண்டுகின்றேன்.
G.U.Pope:
One thing I beg of beggars all, 'If beg ye may,
Of those who hide their wealth, beg not, I pray.'
Explanation
I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."
மூலம்:
1068 . இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
பரிமேழலகர் உரை:
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி -'இவ்வறுமை
என்னும் கடலை இதனால் கடத்தும்,' என்று கருதி
ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு
என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால்
கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின்
பிளந்துபோம்.
(முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான்
அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி'
என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது.
அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது
செலுத்தியவழி உடைதலானும், அதற்கண் ஏறற்க
என்பதாம். இஃது அவயவ உருவகம்.) ---
மு.வ உரை:
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை
ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால்
உடைந்துவிடும்.
G.U.Pope:
The fragile bark of beggary
Wrecked on denial's rock will lie.
Explanation
The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.
மூலம்:
1069 . இரவுஉள்ள உள்ளம் உருகும்: கரவுஉள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
பரிமேழலகர் உரை:
இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார்முன்
இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை
நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு
உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக்
கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை
நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப்
பொன்றிவிடும்.
(''இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால்
என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.''
(நாலடி. 305) என்றார் பிறரும். இரவினும் கரவு
கொடிது என்பதாம். இதற்குப் பிறரெல்லாம்
'இரக்கின்றவர் உள்ளம் உருகும்' என்று உரைத்தார்.) -
--
மு.வ உரை:
இரத்தலின் கொடுமையை நினைந்தால் உள்ளம் கரைந்து உருகும்;
உள்ளதை ஒளிக்கும் கொடுமையை நினைந்தால், உருகுமளவும்
இல்லாமல் அழியும்.
G.U.Pope:
The heart will melt away at thought of beggary,
With thought of stern repulse 'twill perish utterly.
Explanation
To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.
மூலம்:
1070 . கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
பரிமேழலகர் உரை:
சொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை
என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர்
போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் -
இனிச் சொல்லாடுகின்ற அவர் தமக்கு உயிர் பின்னும்
நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து
நிற்கும்?
(உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்?'
என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். ''அந்நிலையே,
மாயானோ மாற்றி விடின்'' (நாலடி. 308) என்றார்
பிறரும். 'கேட்டாரைக் கொல்ல வற்றாய சொல்,
சொல்வாரைக்கோறல் சொல்லவேண்டாவாயினும் அது
காண்கின்றிலம்; இஃகு என்னோ' என்பதாம்.
'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்
கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம்; ஆனபின்,
மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால்
போகாது எங்கே ஒளிந்து நிற்கும்? இரண்டானும்
போமேயன்றோ?' என இரவஞ்சினான் ஒருவன்
கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று
பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும்
ஒருங்கு கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
G.U.Pope:
E'en as he asks, the shamefaced asker dies;
Where shall his spirit hide who help denies?
Explanation
Saying "No" to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself ?