மூலம்:
1051 . இரக்க இரத்தக்கார்க் காணின்: கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
பரிமேழலகர் உரை:
இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு
ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர்
கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப்
பழியாகாமையான்.
('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது
இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.
இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன்
உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர்
உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர்
மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு
இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை
காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின்
அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர் கண்
கடிது சேறலின் 'அவர்பழி' என்றும், ஏற்பிலார் மாட்டு
இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.) -
--
மு.வ உரை:
இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும்;
அவர் இல்லையென்று ஒளிப்பாரானால் அது அவர்க்குப் பழி;
தமக்குப் பழி அன்று.
G.U.Pope:
When those you find from whom 'tis meet to ask,- for aid apply;
Theirs is the sin, not yours, if they the gift deny.
Explanation
If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.
மூலம்:
1052 . இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
பரிமேழலகர் உரை:
ஒருவற்கு இரத்தல் இன்பம் - ஒருவற்கு
இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை
துன்பம் உறாஅ வரின் - இரந்த பொருள்கள் ஈவாரது
உணர்வு உடைமையால் தான் துன்புறாமல்
வருமாயின்.
(இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது
கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதி யொருமைப்
பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும்
அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம்
வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச்
சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி
வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர்
முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர்
துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர்
பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து
ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு
பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண்
இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால்,
அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
G.U.Pope:
Even to ask an alms may pleasure give,
If what you ask without annoyance you receive.
Explanation
Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).
மூலம்:
1053 . கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து.
பரிமேழலகர் உரை:
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும்
- கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம்
அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று
இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர்
அழகு உடைத்து.
(''சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு'' [குறள். 963]
என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது.
அதனை அறிதல், சொல்லுதலுற்று
உரைக்கலாகாமைக்கு ஏதுவாய் அதன் இயல்பினை
அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே
அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான்
வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து'
என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி
நின்றது.) ---
மு.வ உரை:
ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின்
முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு
உடையதாகும்.
G.U.Pope:
The men who nought deny, but know what's due, before their face
To stand as suppliants affords especial grace.
Explanation
There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).
மூலம்:
1054 . இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
பரிமேழலகர் உரை:
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் -
தமக்குள்ளது சுரத்தலைக் கனவின்கண்ணும்
அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்;
ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும்.
(உம்மை - ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ்
பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெடவாராமையின்
'ஈதலே போலும்' என்றார். ஏகாரம் - ஈற்றசை.) ---
மு.வ உரை:
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும்
அறியாதவனிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே
போன்ற சிறப்புடையது.
G.U.Pope:
Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream.
Explanation
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);
மூலம்:
1055 . கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்நின்று
இரப்பவர் மேற்கொள் வது.
பரிமேழலகர் உரை:
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன்
மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார்
உயிரோம் பற்பொருட்டு அதனை மேற்கொண்டு
போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான்
- அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து
உளராய தன்மையானே; பிறிதொன்றான் அன்று.
(அவர் இல்லையாயின். மானம் நீக்க மாட்டாமையின்
உயிர் நீப்பர் என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது,
உள்ளதை இல்லை என்று, ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில்
இருப்பதால்தான்.
G.U.Pope:
Because on earth the men exist, who never say them nay,
Men bear to stand before their eyes for help to pray.
Explanation
As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.
மூலம்:
1056 . கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
பரிமேழலகர் உரை:
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது
கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு
இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம் விடாது
இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக்
கெடும்.
(கரத்தல், ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின்,
அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத
இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர்
கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு
கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர்.
'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி, 'எஞ்சாமற்
கெடும்' என்று உரைப்பாரும் உளர்.) ---
மு.வ உரை:
உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவரைக் கண்டால்,
இரப்பவரின் வறுமைத்துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும்.
G.U.Pope:
It those you find from evil of 'denial' free,
At once all plague of poverty will flee.
Explanation
All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.
மூலம்:
1057 . இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
பரிமேழலகர் உரை:
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை
அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக்
கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது
உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து
உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து.
(இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும்
இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை
கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம்
எய்தினாராகக் கருதலான், ''உள்ளுள் உவப்பது
உடைத்து'' என்றார். இவை ஐந்து பாட்டானும்
அவ்விரத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால்,
இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை
அடையும் தன்மையுடையதாகும்.
G.U.Pope:
If men are found who give and no harsh words of scorn employ,
The minds of askers, through and through, will thrill with joy.
Explanation
Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.
மூலம்:
1058 . இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
பரிமேழலகர் உரை:
இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார்
இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த
இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு
வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத
மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று
வந்தாற்போலும்.
(ஐகாரம், அசைநிலை ஞாலம் என்னும் ஆகுபெயர்ப்
பொருட்கு உவமையோடு ஒத்த தொழில்
வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை
ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும்
புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார்
என்பதாம், ''ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து
வாழ்வாரே வன் கணவர்,'' என்றார் பிறரும்:
இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்'
என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---
மு.வ உரை:
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால்
செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற்
போன்றதாகும்.
G.U.Pope:
If askers cease, the mighty earth, where cooling fountains flow,
Will be a stage where wooden puppets come and go.
Explanation
If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.
மூலம்:
1059 . ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை?
பரிமேழலகர் உரை:
இரந்துகோள் மேவார் இலாஅக் கடை -
அவர்பாற்சென்று ஒன்றனை இரந்து கோடலை
விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என்
உண்டாம் - கொடுப்பார்மாட்டு என்ன புகழுண்டாம்?
யாதுமில்லை.
(தோற்றம் - ஆகுபெயர். 'மேவுவார்' என்பது
விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை
வெளிப்படாமையின், அதனால் புகழெய்தார் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார்
வேண்டும் என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள
விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன
புகழ் உண்டாகும்?
G.U.Pope:
What glory will there be to men of generous soul,
When none are found to love the askers' role?
Explanation
What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).
மூலம்:
1060 . இரப்பான் வெகுளாமை வேண்டும்: நிரப்புஇடும்பை
தானேயும் சாலும் கரி.
பரிமேழலகர் உரை:
இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப்
பொருள் உதவாவழி 'இவன் எனக்கு ஈகின்றிலன்'
என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல்
வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் -
அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு
சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும்
சான்றாதல் அமையும்.
(யாவர்க்கும் தேட வேண்டுதலும் நிலையின்மையும்
முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட
நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி
மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள்
கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக
வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க
என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர்
இயல்பு கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும்; அவன்
அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும்
சான்றாக அமையும்.
G.U.Pope:
Askers refused from wrath must stand aloof;
The plague of poverty itself is ample proof.
Explanation
He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing).