திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       குடியியல்

              அதிகாரம்: 105                   நல்குரவு
1041. இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

மு.வ உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்,

1042. இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழைமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.

1044. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

மு.வ உரை:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கிவிடும்.

1045. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

1046. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

மு.வ உரை:
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்ன போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

1047. அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

மு.வ உரை:
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலனைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

மு.வ உரை:
நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ! (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்,)

1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது.

மு.வ உரை:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

1050. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

மு.வ உரை:
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

------


Back to Top