மூலம்:
1021 . கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்.
பரிமேழலகர் உரை:
கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின்-தன்
குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம்
முடியாமையின் எண்ணி கருமம் செய்தற்கு யான்
கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல;
ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு
மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை.
('குடி செயற்கு என்பது அதிகாரத்தான் வந்தது.
பலவகைத்தாய கருமச் செயலாற் செல்வமும் புகழும்
எய்திக் குடி உயரும் ஆகலின், பீடுடையது இல்'
என்றார். குடி செய்தற் கருமமே நடத்தலால் 'தன்
கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய'
என்றும், உரைப்பாரும் உளர். தன் கருமமும்
அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல்
தலைமையன்மையானும், அவை உரையன்மை
அறிக.) ---
மு.வ உரை:
குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய
மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல
மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
G.U.Pope:
Who says 'I'll do my work, nor slack my hand',
His greatness, clothed with dignity supreme, shall stand.
Explanation
There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).
மூலம்:
1022 . ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
பரிமேழலகர் உரை:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள்வினையான் முயற்சியும் நிறைந்த அறிவும் என்று
சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத
கருமச்செயலால், குடி நீளும் - ஒருவன் குடி உயரும்.
(நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி
நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு.
ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை
முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு
இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும்
உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து
விளங்கும்.
G.U.Pope:
The manly act and knowledge full, when these combine
In deed prolonged, then lengthens out the race's line.
Explanation
One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.
மூலம்:
1023 . குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
பரிமேழலகர் உரை:
குடி செய்வல் என்னும் ஒருவற்கு - 'என் குடியினை
உயரச் செய்யக் கடவேன்' என்று கொண்டு, அதற்கு
ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத்
தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும்.
(முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல்
- இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல்
ஏற்பட்டது.) ---
மு.வ உரை:
என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ்,
ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை
செய்யும்.
G.U.Pope:
'I'll make my race renowned,' if man shall say,
With vest succinct the goddess leads the way.
Explanation
The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.
மூலம்:
1024 . சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
பரிமேழலகர் உரை:
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம்
வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே
முடிவெய்தும் அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழ
வேண்டாமல், தானே முடிவெய்தும்.
(குடி ஆகு பெயர். தெய்வம் முந்துறு தலான் பயன்
கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத்
தெய்வம் துணையாதல் கூறப்பட்டது. ---
மு.வ உரை:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வார்க்கு
அவர் ஆராயாமலே அச்செயல் தானே நிறைவேறும்.
G.U.Pope:
Who labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain.
Explanation
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succee d.
மூலம்:
1025 . குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
பரிமேழலகர் உரை:
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை -
குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச்
செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு -
அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர்
உலகத்தார்.
(குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய
செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும்
சென்று சார்வர் என்பதாம்.) ---
மு.வ உரை:
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து
வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து
கொள்வர்.
G.U.Pope:
With blameless life who seeks to build his race's fame,
The world shall circle him, and kindred claim.
Explanation
People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.
மூலம்:
1026 . நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்ஆண்மை ஆக்கிக் கொளல்.
பரிமேழலகர் உரை:
ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு
நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான்
பிறந்த குடியினையாளுந் தன்மையைத்
தனக்குளதாக்கிக் கோடல்.
(போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என
விசேடித்தார். குடியினை யாளுந் தன்மை -
குடியிலுள்ளாரை உயரச் செய்து தன் வழிப்படுத்தல்.
அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு
வருகின்ற பாட்டால் பெறப்படும்.) ---
மு.வ உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த
குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.
G.U.Pope:
Of virtuous manliness the world accords the praise
To him who gives his powers, the house from which he sprang to raise.
Explanation
A man's true manliness consists in making himself the head and benefactor of his family.
மூலம்:
1027 . அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
பரிமேழலகர் உரை:
அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண்
சென்றார் பலராயினும் போர்தாங்குதல்
வன்கண்ணர்மேலதானாற் போல; தமரகத்தும் பொரை
ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார்
பவராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார்
மேலதாம்.
(பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண்
வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே
என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார்
எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
போர்க்களத்தில் பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்
அஞ்சாத வீரரைப்போல், குடியில் பிறந்தவரிடையிலும்
தாங்கவல்லவர்மேல்தான் பொறுப்பு உள்ளது.
G.U.Pope:
The fearless hero bears the brunt amid the warrior throng;
Amid his kindred so the burthen rests upon the strong.
Explanation
Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.
மூலம்:
1028 . குடிசெய்வார்க்கு இல்லை பருவம்: மடிசெய்து
மானம் கருதக் கெடும்.
பரிமேழலகர் உரை:
மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை
உயரச் செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை
நோக்கி மடியினைச் செய்து கொண்டு மானத்தையும்
கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம்
இல்லை. ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை.
(காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை
பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர் செய்தும்'
என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் -
'இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத்
துன்பமுறுவேன் யானோ?' என்று உட்கோடல். மேல்
''இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது''
(குறள். 481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும்
வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று
மறுத்தவாறு.) ---
மு.வ உரை:
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரியகாலம் என்று
ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம் மானத்தைக்
கருதுவாரானால் குடிப்பெருமை கெடும்.
G.U.Pope:
Wait for no season, when you would your house uprear;
'Twill perish, if you wait supine, or hold your honour dear.
Explanation
As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.
மூலம்:
1029 . இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு?
பரிமேழலகர் உரை:
குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத்
துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை
உறாமற்காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே
கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே
கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து
இன்பத்திற்கு ஆதல் இல்லையோ?
(''உறைப்பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும
நிற் குறித்து வருவேலே'' (புறநா. 290) என்புழியும்
மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என் குடிமுழுதும்
இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான்
இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று
முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும்
ஒழியாமைநோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங்
கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை
இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற
ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ?
G.U.Pope:
Is not his body vase that various sorrows fill,
Who would his household screen from every ill?
Explanation
Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?
மூலம்:
1030 . இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும்
நல்ஆள் இலாத குடி.
பரிமேழலகர் உரை:
இடுக்கண் கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய
நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு
பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள்
இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத்
தாங்க வல்ல நல்ல ஆண் மகன் பிறவாத குடியாகிய
மரம்.
(முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப்
பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக்
கெடுதலும் உடைமையின், மரமாக்கினார்;
''தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன,
ஓங்குகுலம் நைய அதனுட்பிறந்த வீரர், தாங்கல்
கடன்'' [சீவக. காந்தருவ. 6] என்றார் பிறரும். இது
குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு
உளதாம் குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
துன்பம் வந்தபோது உடனிருந்து தாங்கவல்ல நல்ல ஆள் இல்லாத
குடி, துன்பமாகிய கோடரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.
G.U.Pope:
When trouble the foundation saps the house must fall,
If no strong hand be nigh to prop the tottering wall.
Explanation
If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.