திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       குடியியல்

              அதிகாரம்: 103                   குடிசெயல்வகை
1021. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்.

மு.வ உரை:
குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

மு.வ உரை:
முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

மு.வ உரை:
என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்.

1024. சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

மு.வ உரை:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வார்க்கு அவர் ஆராயாமலே அச்செயல் தானே நிறைவேறும்.

1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

மு.வ உரை:
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

1026. நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்ஆண்மை ஆக்கிக் கொளல்.

மு.வ உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.

1027. அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

மு.வ உரை:
போர்க்களத்தில் பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப்போல், குடியில் பிறந்தவரிடையிலும் தாங்கவல்லவர்மேல்தான் பொறுப்பு உள்ளது.

1028. குடிசெய்வார்க்கு இல்லை பருவம்: மடிசெய்து
மானம் கருதக் கெடும்.

மு.வ உரை:
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரியகாலம் என்று ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும்.

1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு?

மு.வ உரை:
தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ?

1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும்
நல்ஆள் இலாத குடி.

மு.வ உரை:
துன்பம் வந்தபோது உடனிருந்து தாங்கவல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

------


Back to Top