மூலம்:
1011 . கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
பரிமேழலகர் உரை:
நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது
இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல்
நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது
ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை
அவரளவல்ல; அழகிய நுதலினையுடைய குலமகளிர்
நாண்கள்.
('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது
'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால்
கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்'
என்பது புகழ்ச்சிக்குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற'
என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன
பொதுமகளிர் நாணோடு ஒக்கும்', என்று உரைப்பாரும்
உளர்; அவர்க்கு நாண் கேடு பயக்கும் என
விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற்
கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக.
இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும்; பெண்களுக்கு
இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
G.U.Pope:
To shrink abashed from evil deed is 'generous shame';
Other is that of bright-browed one of virtuous fame.
Explanation
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.
மூலம்:
1012 . ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்ல
நாண்உடைமை மாந்தர் சிறப்பு.
பரிமேழலகர் உரை:
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல -
ஊணும் உடையும் அவை யொழிந்தனவும்
மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண்
உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது
நாணுடைமையே; அவையல்ல.
(ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு -
அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று
பாடமோதுவாரும் உளர்.) ---
மு.வ உரை:
உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா
உயிர்களுக்கும் பொதுவானவை ; மக்களின் சிறப்பியல்பாக
விளங்குவது நாணுடைமையே ஆகும்.
G.U.Pope:
Food, clothing, and other things alike all beings own;
By sense of shame the excellence of men is known.
Explanation
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.
மூலம்:
1013 . ஊனைக் குறித்த உயிரெல்லாம்: நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
பரிமேழலகர் உரை:
உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும்
உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு
அதனை விடா; சால்பு நாண் என்னும் நன்மை குறித்து
- அது போலச் சால்பு நாண் என்னும் நன்மைக்
குணத்தைத் தனக்கு நிலைக்களனாகக் கொண்ட,
அதனை விடாது.
('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை -
ஆகுபெயர். உயிர் உடம்பொடு கூடியல்லது
பயனெய்தாத வாறுபோலச் சால்பு நாணோடு
கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக்
குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---
மு.வ உரை:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக்
கொண்டவை; சால்பு என்பது, நாணம் என்று சொல்லபடும் நல்ல
தன்மையை இருப்பிடமாகக் கொண்டது.
G.U.Pope:
All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame.
Explanation
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.
மூலம்:
1014 . அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு: அஃதுஇன்றேல்
பிணிஅன்றோ பீடு நடை?
பரிமேழலகர் உரை:
சான்றோர்க்கு நாண்உடைமை அணியன்றோ -
சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது
இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம்
இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை
கண்டார்க்குப் பிணியாம்.
(அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு
அருமையின் 'பிணி' என்றும், கூறினார். ஓகார
இடைச் சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை
மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ? அந்த அணிகலம்
இல்லையானால், பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய்
அன்றோ?
G.U.Pope:
And is not shame an ornament to men of dignity?
Without it step of stately pride is piteous thing to see.
Explanation
Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).
மூலம்:
1015 . பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
பரிமேழலகர் உரை:
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும்
பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து
நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் -
உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.
(ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே
கருதுதல், அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை
உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான்
அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பிறர்க்கு வரும் பழிக்காகவும் தமக்கு வரும் பழிக்காவும்
நாணுகின்றவர், நாணத்திற்கு உறைவிடமானவர் என்று உலகம்
சொல்லும்.
G.U.Pope:
As home of virtuous shame by all the world the men are known,
Who feel ashamed for others, guilt as for their own.
Explanation
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.
மூலம்:
1016 . நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
பரிமேழலகர் உரை:
மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது -
தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன்
ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள
விரும்பார்.
(பழி பாவங்கள் புகுநாமற் காத்தலின், 'வேலி'
என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி
அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுந்து
நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார்
என்பதாம். மன்னும் ஓவும் அசைகள். 'நாணாகிய
வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்'
என்று உரைப்பாரும் உளர்.) ---
மு.வ உரை:
நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து கொள்ளாமல்,
மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி
மேற்கொள்ளமாட்டார்.
G.U.Pope:
Unless the hedge of shame inviolate remain,
For men of lofty soul the earth's vast realms no charms retain.
Explanation
The great make modesty their barrier (of defence) and not the wide world.
மூலம்:
1017 . நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்.
பரிமேழலகர் உரை:
நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை
விடாதொழுகுவார்; நாணல் உயிரைத் துறப்பார் -
அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நான்
சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பார்;
உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப்
பொருட்டு நாணினை நீக்கார்.
(உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு
பாட்டானும் அவற் செயல்கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை
விடுவார்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார்.
G.U.Pope:
The men of modest soul for shame would life an offering make,
But ne'er abandon virtuous shame for life's dear sake.
Explanation
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.
மூலம்:
1018 . பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
பரிமேழலகர் உரை:
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் -
கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன்
தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது
உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத்
தக்க குற்றத்தினையுடையத்து
('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்;
'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை
அறம் சாராது என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான்
நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும்
தன்மையுடையதாகும்.
G.U.Pope:
Though know'st no shame, while all around asha med must be:
Virtue will shrink away ashamed of thee!
Explanation
Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.
மூலம்:
1019 . குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின்: நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
பரிமேழலகர் உரை:
கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு
ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன்
குடிப்பிறப்பொன்றனையும் - கெடுக்கும்; நாணின்மை
நின்றக்கடை நலம் சுடும் - ஒருவான் மாட்டு
நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம்
யாவற்றையும் கெடுக்கும்.
(நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம்
சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம்,
செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம்
கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு
இறப்பத் தீது என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய
குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால்
நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
G.U.Pope:
'Twill race consume if right observance fail;
'Twill every good consume if shamelessness prevail.
Explanation
Want of manners injures one's family; but want of modesty injures one's character.
மூலம்:
1020 . நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.
பரிமேழலகர் உரை:
அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின் கண்
நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று
இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர்
மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக்
கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக
மயங்கினாற்போலும்.
(கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள்
இயக்கம், நாணுடைய பாவை இயக்கம்
போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை
மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல் மரத்தால்
செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக
மயக்கினாற் போன்றது.
G.U.Pope:
'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men.
Explanation
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.