மூலம்:
1001 . வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
பரிமேழலகர் உரை:
(வைத்தான்' என்பது முற்றெச்சம். உண்ணுதல்.
அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற
பெரும் பொருளை வைத்தானொருவன்
அதனையுண்ணாது செத்த வழி, அதன்கண் அவனாற்
செம்யக் கிடந்ததோர் உரிமையில்லை யாகலான்,
வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும்
அமையும். இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம்.
இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து
வைத்து அதை உண்டு நுகராமல் இறந்துபோனால் அவன் அந்தப்
பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை
G.U.Pope:
Who fills his house with ample store, enjoying none,
Is dead. Nought with the useless heap is done.
Explanation
He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).
மூலம்:
1002 . பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
பரிமேழலகர் உரை:
பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும்
உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து
அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின்
பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே;
மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத
பேய்ப்பிறப்பு உண்டாம்.
(இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க
'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு
பின் மயங்குதலின், 'மருள்' என்றும்,
பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த
தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து
வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கும் ஒன்றும்
கொடுக்காமல் இறுகப் பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி
உண்டாம்.
G.U.Pope:
Who giving nought, opines from wealth all blessing springs,
Degraded birth that doting miser's folly brings.
Explanation
He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.
மூலம்:
1003 . ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
பரிமேழலகர் உரை:
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் -
யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல்
மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை
விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை -
நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே.
(இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின்,
ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல்
துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய
அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு
என்றது அதற்கு உரிய உடம்பினை.) ---
மு.வ உரை:
சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை
விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.
G.U.Pope:
Who lust to heap up wealth, but glory hold not dear,
It burthens earth when on the stage of being they appear.
Explanation
A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.
மூலம்:
1004 . எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்?
பரிமேழலகர் உரை:
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும்
ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல்
இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் -
தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக்
கருதுமோ?
(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி
நில்லாமையின், அவனுக்கு அதனோடு யாதும் இயைபு
இல்லை என்பார், ' என் எண்ணுங்கொல்லோ''
என்றார். ஓகாரம் - அசை. இவை மூன்று பாட்டானும்
பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும்
விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று
எதனை எண்ணுவானோ?
G.U.Pope:
Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?
Explanation
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
மூலம்:
1005 . கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.
பரிமேழலகர் உரை:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு
ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும்
உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும்
இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும்
ஒன்றும் இல்லை.
(இன்பத்தினும் அறம் சிறந்தமையின், கொடுத்தல்
தொழில் முன்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது
ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது.
ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின்,
'இல்' என்றார்.) ---
மு.வ உரை:
பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு
மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன்
இல்லை.
G.U.Pope:
Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.
Explanation
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.
மூலம்:
1006 . ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல் இயல்பிலா தான்.
பரிமேழலகர் உரை:
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல்
இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும்
தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை
ஈதலியற்கை இலனாயினான்; பெருஞ்செல்வம் ஏதம் -
இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு
ஒரு நோய்.
(தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் -
ஆகுபெயர். நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய
தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்'
என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம்
அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால்
துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை
இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன்
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும்
இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு
ஒரு நோய் ஆவான்.
G.U.Pope:
Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart.
Explanation
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.
மூலம்:
1007 . அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
பரிமேழலகர் உரை:
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு
பொருளும் இலராயினார்க்கு அவர்
வேண்டியதொன்றனைத் கொடாதானது செல்வம்
கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள் தமியள்
மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப்
பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன்
இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து.
(நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும்.
இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்'
என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும்
பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை
கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச்
செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.) ---
மு.வ உரை:
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து
உதவாதவனுடைய செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக
வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.
G.U.Pope:
Like woman fair in lonelihood who aged grows,
Is wealth of him on needy men who nought bestows.
Explanation
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.
மூலம்:
1008 . நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
பரிமேழலகர் உரை:
நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு
அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான்
நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள்
நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம்
பழுத்தாற் போலும்.
('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம்
வேற்றுமைத் தொகை. அன்மை உடைமைகளான்
பயனில்லை என்பதாம்.) ---
மு.வ உரை:
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும்
விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற்
போன்றது.
G.U.Pope:
When he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some p oisonous tree.
Explanation
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.
மூலம்:
1009 . அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
பரிமேழலகர் உரை:
அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச்
சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன்
செற்று - வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து;
அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய
அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள்
கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக்
கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர்.
(பயனாய அறனும் இன்பமும் செய்து
கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல்
துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன்
வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்'
என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி
அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்த பெரும் பொருளைப்
பெற்று நுகர்பவர் மற்றவரே.
G.U.Pope:
Who love abandon, self-afflict, and virtue's way forsake
To heap up glittering wealth, their hoards shall others take.
Explanation
Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.
மூலம்:
1010 . சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
பரிமேழலகர் உரை:
சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாய
செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய
வறுமை மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து -
உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை
மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து.
(துனி - வெறுப்பு; அதனைச் செய்தலால், துனி
எனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான்
வறியராய வழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின்,
பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையால்
பெறப்பட்டது. படவே, நன்றியில்லாத செல்வம்
எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்கு, சீர்
உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில்
வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை
உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும்,
ஓர் பொருள் தொடர்பு படாமல் உரைப்பாரும் உளர்.
இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக்
காக்கவல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.
G.U.Pope:
'Tis as when rain cloud in the heaven grows day,
When generous wealthy man endures brief poverty.
Explanation
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).