திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       குடியியல்

              அதிகாரம்: 100                   பண்புடைமை
991. எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு.

மு.வ உரை:
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செல்வியுடன் இருப்பதால் அடைவது எளியது என்று கூறுவர்.

992. அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு.

மு.வ உரை:
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

993. உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால்: வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.

மு.வ உரை:
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

994. நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு.

மு.வ உரை:
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன் பட வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

995. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி: பகையுள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு.

மு.வ உரை:
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்ல பண்புகள் உள்ளன.

996. பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்: அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.

மு.வ உரை:
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது; அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்துபோகும்.

997. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

மு.வ உரை:
மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவராயினும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

998. நண்புஆற்றா ராகி நயம்இல செய்வார்க்கும்
பண்புஆற்றார் ஆதல் கடை.

மு.வ உரை:
நட்புக் கொள்ள முடியாதவராய்த் தீயவை செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

மு.வ உரை:
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

1000. பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

மு.வ உரை:
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

------


Back to Top