மூலம்:
91 . இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
பரிமேழலகர் உரை:
இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு
இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் -
அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற
அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல்
அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை
வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை.
மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம்
செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள்
எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும்.
'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா
என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு
இலக்கணம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள்
கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
G.U.Pope:
Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.
Explanation
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.
மூலம்:
92 . அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
பரிமேழலகர் உரை:
அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து
ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும்
நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் -
கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய
சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு
கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது
அன்றித் தன் வயத்தது ஆயினும்,
அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின்
அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன்
ஆகப் பெறின்' என்றார்.).
மு.வ உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால்,
மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
G.U.Pope:
A pleasant word with beaming smile's preferred,
Even to gifts with liberal heart conferred.
Explanation
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
மூலம்:
93 . முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொ லினதே அறம்.
பரிமேழலகர் உரை:
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே
முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம்
இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி,
மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின்
கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம்
'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத்
தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று
என்றவாறு. இவை இரண்டு பாட்டானும்
இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக்
கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது
கூறப்பட்டது.).
மு.வ உரை:
முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து
இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
G.U.Pope:
With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity.
Explanation
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.
மூலம்:
94 . துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
பரிமேழலகர் உரை:
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார்
மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை
உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும்
- துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா
முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை
நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார்
மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும்
நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர்
எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.).
மு.வ உரை:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத்
துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
G.U.Pope:
The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found.
Explanation
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
மூலம்:
95 . பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.
பரிமேழலகர் உரை:
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல்
- ஒருவனுக்கு அணியாவது தன்னால்
தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார்
கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற
அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி
ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின்,
பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை
நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும்,
இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல'
எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும்
இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும்
ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும், மற்றைய அணிகள்
அணிகள் அல்ல.
G.U.Pope:
Humility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth.
Explanation
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).
மூலம்:
96 . அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
பரிமேழலகர் உரை:
நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு
நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து
இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய
அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம்
வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம்
வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல்.
"தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51)
என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச்
சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன்
ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச்
சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
G.U.Pope:
Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.
Explanation
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.
மூலம்:
97 . நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
பரிமேழலகர் உரை:
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு
நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும்
பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்
- பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து
இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு
பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான்
இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல்
நீர்மைத்து.).
மு.வ உரை:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத
சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
G.U.Pope:
The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere.
Explanation
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).
மூலம்:
98 . சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
பரிமேழலகர் உரை:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு
நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு
இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை
இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை
இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன
எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும்
இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல்
வலியுறுத்தப்பட்டது.).
மு.வ உரை:
பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய
சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம்
தரும்.
G.U.Pope:
Sweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart.
Explanation
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.
மூலம்:
99 . இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
பரிமேழலகர் உரை:
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும்
இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து
அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் -
அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது
என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப்
பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது
கூறலாகாது என்பது கருத்து.).
மு.வ உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு
மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
G.U.Pope:
Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words?
Explanation
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?
மூலம்:
100 . இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
பரிமேழலகர் உரை:
இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும்
இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக்
கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன்
கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய
கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை
நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்'
என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை
விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும்
சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட
நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத
காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை.
கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது
என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத
கூறலின் குற்றம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான
சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத்
தின்பதைப் போன்றது.
G.U.Pope:
When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
Explanation
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.