மூலம்:
1 . அகர முதல எழுத்தெல்லாம் : ஆதி
பகவன் முதற்றே உலகு.
பரிமேழலகர் உரை:
எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள்
எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு
ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன்
ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த
எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை
விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற்
பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை
உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும்
உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட
எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம்
என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப்
பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு
உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால்
காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின்,
'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக்
கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன்
என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண்
வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை
கூறப்பட்டது.)
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக்
கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக்
கொண்டிருக்கின்றது.
G.U.Pope:
A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains.
Explanation
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.
மூலம்:
2 . கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பரிமேழலகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும்
கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?;
வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் -
மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத்
தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என்
என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்'
என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின்
'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன்
தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான்
கூறப்பட்டது.
மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல
திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற
கல்வியினால் ஆகிய பயன் என்ன?
G.U.Pope:
No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore.
Explanation
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?
மூலம்:
3 . மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பரிமேழலகர் உரை:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின்
கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச்
சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும்
மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
(அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர்
நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்'
என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக்
காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம்
வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு
கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல்,
சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப்
'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர்
கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது
நினைத்தல்).
மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த
திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில்
நிலைத்து வாழ்வார்.
G.U.Pope:
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain
In bliss long time shall dwell above this earthly plain.
Explanation
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.
மூலம்:
4 . வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பரிமேழலகர் உரை:
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு -
ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும்
இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும்
இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள்
உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி
வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும்,
தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான்
வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும்
(வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை
காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும்
இலவாயின.).
மு.வ உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
G.U.Pope:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.
Explanation
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
மூலம்:
5 . இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பரிமேழலகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி
வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு
வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ்
புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த
புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என
ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்'
என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான்
'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக்
குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி
அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின்,
அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள்
சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும்
சொல்லுதல்).
மு.வ உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம்,
அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
G.U.Pope:
The men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.
Explanation
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
மூலம்:
6 . பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பரிமேழலகர் உரை:
பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண்,
மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய
ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண்
நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும்
ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து
ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து
ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால்
சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட்
கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது
போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை
நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும்
செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது).
மு.வ உரை:
ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த
இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை
பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
G.U.Pope:
Long live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
Explanation
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
மூலம்:
7 . தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
பரிமேழலகர் உரை:
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர்
இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது;
மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும்
துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால
தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல,
ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள்
சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி
மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து
அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர்
என்பதாம்.).
மு.வ உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப்
பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு
மனக்கவலையை மாற்ற முடியாது.
G.U.Pope:
Unless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.
Explanation
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
மூலம்:
8 . அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.
பரிமேழலகர் உரை:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் -
அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச்
சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின்
பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள்,
இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை
முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும்,
இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட
அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக
உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார்.
'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை
உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர்.
அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே
அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது
ஏகதேச உருவகம்.).
மு.வ உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய
மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.
G.U.Pope:
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
'Tis hard the further bank of being's changeful sea to attain.
Explanation
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.
மூலம்:
9 . கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பரிமேழலகர் உரை:
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற
புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப்
பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை
வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை
உடையானது தாள்களை வணங்காத தலைகள்.
(எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய
உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல்,
முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின்
நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல்
உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என
இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது.
'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை
இலா அறிவை' முதலாக உடையன எனவும்
உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல
வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல்
வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி
வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல
என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும்
அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும்
செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை
உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள்
பயனற்றவைகளாம்.
G.U.Pope:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead.
Explanation
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
மூலம்:
10 . பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பரிமேழலகர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல்
நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச்
சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய்
அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய்
கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்'
என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம்.
உலகியல்பை நினையாது இறைவன் அடியையே
நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி
நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும்
இதனான் நியமிக்கப்பட்டன.).
மு.வ உரை:
இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்
பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க
முடியாது.
G.U.Pope:
They swim the sea of births, the 'Monarch's ' foot who gain;
None others reach the shore of being's mighty main.
Explanation
None can swim the great sea of births but those who are united to the feet of God.